/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னர், அமைச்சர் பெயரில் வேலை ஆசை காட்டி மோசடி
/
கவர்னர், அமைச்சர் பெயரில் வேலை ஆசை காட்டி மோசடி
ADDED : ஆக 13, 2025 04:35 AM
பெலகாவி: கவர்னர் தாவர்சந்த் கெலாட், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் பெயரில் போலியான லெட்டர்ஹெட் தயாரித்து மோசடி செய்தது குறித்து, வழக்கு பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக, பெலகாவி மாவட்ட போலீஸ் எஸ்.பி., பீமா சங்கர் குளேத், நேற்று அளித்த பேட்டி:
மகளிர், குழந்தைகள் நலத்துறையில் வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்துள்ளனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட், அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் கையெழுத்துகளை போர்ஜரி செய்து, போலியான லெட்டர் ஹெட்களை பயன்படுத்தியுள்ளனர். இது குறித்து, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர், எங்களுக்கு கடிதம் எழுதினார்.
இதன்படி விசாரணை நடத்துகிறோம். மோசடிக்கு ஆளானவர்கள் புகார் அளிக்க முன் வரவில்லை. எனவே வழக்கு பதிவு செய்வது தாமதமானது.
அதன்பின் காவ்யா என்பவர் புகார் அளித்தார். இவருக்கு வேலை வாங்கி தருவதாக நம்ப வைத்து, லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்து மோசடி செய்துள்ளனர்.
வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, மஞ்சுநாத் என்பவர், மோசடியில் முக்கியமான குற்றவாளி என்பது தெரிந்தது.
இந்த மோசடியில், மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் அந்தரங்க உதவியாளர் சோமன கவுடாவுக்கு தொடர்புள்ளதாக, தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அதை உறுதிப்படுத்த ஆதாரங்கள் இல்லை.
மஞ்சுநாத் ஏற்கனவே முன்ஜாமின் பெற்று கொண்டதால், அவரை கைது செய்யவில்லை. அரசு வேலை ஆசை காட்டி, 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான மோசடி செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.