ADDED : மார் 26, 2026 12:52 AM

உத்தர கன்னடா: காங்கிரஸ் தலைவரை கத்தியால் வெட்டிய ஆறு மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உத்தர கன்னடா அன்கோலா பகுதியின் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் கோபாலகிருஷ்ணா நாயக். இவர், நேற்று காலை முடி வெட்டுவதற்காக அன்கோலோ பகுதியில் உள்ள சலுானுக்கு சென்றார். அப்போது, காரில் வந்த ஆறு மர்ம நபர்கள் நாயக்கை கத்தியால் வெட்டினர். பின், அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதில், நாயக்கின் தலை, வயிறு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது; ரத்தம் வழிந்தோடியது. அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்தை எஸ்.பி., தீபன் பார்வையிட்டார். அன்கோலா போலீசார் விசாரணையை துவங்கினர்.
சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்படுகிறது. சம்பவம் நடந்த பகுதியில் இருந்தவர்களிடம் வாக்குமூலங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
மர்ம நபர்கள் கோவாவில் பதிவு செய்த காரை பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. இது, அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
