சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
ADDED : மார் 15, 2026 05:52 AM

நெலமங்களா: டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரியில் இருந்து, காஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
மங்களூரில் இருந்து பெங்களூருக்கு காஸ் நிரப்பிய டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு புறப்பட்டது.
நேற்று காலை, 11:00 மணியளவில், பெங்களூரு ரூரல் நெலமங்களா அருகே சோலுார் கிராஸ் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தறிகெட்டு ஓடி சாலையின் நடுவே கவிழ்ந்தது.
டேங்கரில் இருந்து காஸ் கசிவு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உருவானது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், கூடூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். முதலில் டேங்கர் லாரியில் இருந்து காஸ் கசிவு நிறுத்தப்பட்டது.
பின், கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த லாரி துாக்கி நிறுத்தப்பட்டது. விபத்தில் டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். சாலையின் நடுவில் டேங்கர் கவிழ்ந்ததால், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
