ADDED : ஜூலை 11, 2026 11:14 PM

- நமது நிருபர் -
மின்சார வாகனங்கள், நகர்ப்பகுதிகளில் மட்டுமே போக்குவரத்துக்கு பயன்படும். தொலை துார பயணத்துக்கு லாயக்கு இல்லை. பேட்டரிகள் பாதுகாப்பானது அல்ல என்பது, பொது மக்களின் கருத்தாகும். ஆனால் இந்த எண்ணத்தை கிரீஷ் ஷேட் தவிடு பொடியாக்கியுள்ளார். மின்சார ஸ்கூட்டரில், 12,111 கி.மீ., பயணித்து, சாதனை செய்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் வசிப்பவர் கிரீஷ் ஷேட், 35. இவர் மோட்டார் பைக் பந்தயத்தில், அதிக ஆர்வம் கொண்டவர். இவர், ஐந்து ஆண்டுகளாக, மின்சார ஸ்கூட்டரில் சாகச பயணம் மேற்கொள்கிறார்.
உலகிலேயே முதன் முறையாக, 2022ல் மின்சார ஸ்கூட்டர் பயன்படுத்தி, கன்னியாகுமரியில் இருந்து, லடாக்கின் கார்துங் வரை பயணித்தார். 4,580 கி.மீ., வரை பயணித்து, முதன் முதன் முறையாக, இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
அதன் பின், 2025ல், மின்சார ஸ்கூட்டரில், பெங்களூரில் இருந்து, டில்லிக்கு, 2,800 கி.மீ., பயணித்தார். வெறும் ஏழு நாட்களில் சென்றடைந்து, 'பாஸ்டெஸ்ட் சிட்டி ஸ்கூட்டர் ரிக்கார்டு' விருது பெற்றார்.
தற்போது மற்றொரு சாதனை செய்துள்ளார். நடப்பாண்டு ஏப்ரல் 12ம் தேதி முதல், மின்சார ஸ்கூட்டரில் துவங்கிய இவரது பயணம், ஜூன் 5ம் தேதியன்று, டில்லியில் முடிந்தது. தொடர்ந்து, 52 நாட்களில், நம் நாட்டின், 16 மாநிலங்களின், 32 நகரங்களை சுற்றி வந்தார். 'பைக் ரைடிங்'குடன், கிரிக்கெட்டிலும் கிரிஷுக்கு அதிக ஆர்வம் உள்ளது. ஐ.பி.எல்., - கே.கே.ஆர்., எனும் 'கொல்கட்டா நைட் ரைடர்ஸ்' அணியின், அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக இருந்த 'ஹீரோ வீடா' நிறுவனத்தின் ஆதரவுடன், 52 நாட்கள் 'ரைட்' நடத்தினார்.
இவரது சாதனையை கவுரவிக்கும் வகையில், கே.கே.ஆர்., அணி, கிரிஷுக்கு இந்தியா முழுதும், கிரிக்கெட் போட்டிகளை காண, 'கோல்டன் டிக்கெட்' வழங்கியது. இவர், இந்த பயணத்தின் போது, 10 கே.கே.ஆர்., - ஐ.பி.எல்., போட்டிகளை பார்த்தார்.
இவரது மின்சார பைக் ரைடிங் சாதனை, எளிதாக இருக்கவில்லை. பயணத்தின் போது, வட மாநிலங்களில், கடுமையான வெப்பக்காற்று வீசியது. விபத்தில் சிக்கி காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதன் பிறகும், மனம் தளராமல் பயணத்தை தொடர்ந்தார்.
இது குறித்து, கிரீஷ் கூறியதாவது:
பெட்ரோல் வாகனத்துடன் ஒப்பிட்டால், மின்சார வாகன பயணத்துக்கு செலவு குறைவு. 12,111 கி.மீ., துாரம் பெட்ரோல் வாகனம் பயன்படுத்தியிருந்தால், 32,000 ரூபாய் செலவாகியிருக்கும்.
ஆனால், மின்சார வாகனத்தில் 'சார்ஜிங்'குக்கு 2,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் மட்டுமே செலவானது. பயண நேரத்தில் ஒரு முறை கூட, ஸ்கூட்டரை பழுது பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.அதி நவீன சார்ஜிங் நெட் ஒர்க், என் பயணத்தை, எளிதாக்கியது. கஷ்டங்கள் வரவில்லை என்றால், அந்த சாதனைக்கு அர்த்தம் இருக்காது.
இதற்கு முன் மின்சார ஸ்கூட்டர் வந்த போது, மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். ஆனால் இப்போது இந்தியா முழுதும், மின்சார ஸ்கூட்டர்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. எரிபொருள் விலை, கிடுகிடுவென அதிகரிக்கும் இந்த காலத்தில், நம் உள்நாட்டு தொழிற்சாலைகள் தயாரிக்கும், மின்சார வாகனங்களை வாங்க வேண்டும். சரியான திட்டமிடல் இருந்தால், எந்த தொந்தரவும் இல்லாமல், மின்சார வாகனங்களிலேயே நாடு முழுதும் பயணிக்க முடியும் என்பதற்கு, என் பயணமே சாட்சியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
