100வது பிறந்த நாள் விழா கொண்டாடும் சமூக சிந்தனையாளர் எஸ்.கோவிந்தசாமி
100வது பிறந்த நாள் விழா கொண்டாடும் சமூக சிந்தனையாளர் எஸ்.கோவிந்தசாமி
ADDED : ஜூலை 11, 2026 11:15 PM

- நமது நிருபர் -:
தங்கவயல் சுரங்கத் தொழிலாளி சஞ்சீவ் -- நாகம்மா தம்பதிக்கு மகனாக, தங்கவயலில், 1926 ஜூலை 15ல் பிறந்தவர், எஸ்.கோவிந்தசாமி. இவர், தங்கவயல் சானிடேரிபோர்ட் உயர்நிலைப்பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., முடித்து, பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் எழுத்தராக, 1942ல் பணியில் சேர்ந்தவர்.
ஆனால், அங்கு ஓராண்டு கூட பணியில் அவர் தொடரவில்லை. தந்தை இறந்த பின், தாய் நாகம்மா அவரை கட்டாயப்படுத்தி, ஜக்கூர் பணியை ராஜினாமா செய்ய வைத்து, தன் தந்தை பணியாற்றிய தங்கச் சுரங்க நிறுவனத்தில், பணியில் சேர வைத்தார்.
இவர், உரிகம், சாம்பியன், மைசூர் மைன்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளின் நகர குடியிருப்புகளின் தலைமை கிளார்க்காக பணியாற்றினார். ஒவ்வொரு தொழிலாளருக்கும் வீடுகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து, தொழிலாளர்கள் மத்தியில் நற்பெயரை பெற்றார்.
இவர் தாழ்த்தப்பட்டோர் சம்மேளனம் அமைப்பில் செயல்பட்டு, சட்டமேதை அம்பேத்கர் கொள்கையில் ஈர்க்கப் பட்டார். தங்கவயல் குடியரசுக்கட்சியில் முன்னோடியாக விளங்கினார்.
தங்கவயலுக்கு, 1954 ஜூலை 12ல் அம்பேத்கர் வந்த போது, அவரை வரவேற்கும் குழுவில் ஆங்கில புலமை மிக்க இவரும் ஒருவர். இங்கு வந்து சென்ற பிறகே, புத்த மதத்தில் அம்பேத்கர் சேர்ந்தார்.
தென் மாநிலங்களில் அம்பேத்கருக்கு முதல் முதலாக சிலையை நிறுவ, சென்னை சிற்ப கூடத்தில் ஆர்டர் கொடுத்து, அதை 1963 ஏப்ரல் 14ல் நிறுவி அதன் திறப்பு விழாவை நடத்திய முன்னோடிகளில் இவரும் ஒருவர்.
கல்வி ஒன்றே மனிதர்களை தரம் உயர்த்தும். ஏற்றத் தாழ்வுகளை அகற்றி, சமத்துவத்தை ஏற்படுத்தும். எனவே, அனைவருமே தம் பிள்ளைகளை படிக்க வைத்து, கல்வியில் சிறந்தவராக வளர்க்க வேண்டும் என்பதே இவரின் முக்கிய அறிவுரை.
இவரின், 100வது பிறந்த தின விழா, இம்மாதம் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது.
