ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் திருப்தி பாத்திர சேனை
ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் திருப்தி பாத்திர சேனை
ADDED : ஜூலை 11, 2026 11:16 PM

- நமது நிருபர் -:
திருமணம், பிறந்த நாள், கிரக பிரவேசம் என, பல்வேறு விழாக்கள், ஹோட்டல்களில் உணவருந்தும் பலரும், அதிகமான உணவை மிச்சம் வைக்கின்றனர். இந்த உணவு, குப்பை தொட்டிக்கு செல்கிறது.
ஒரு வேளை உணவு கிடைக்காமல் பலரும் பரிதவிக்கின்றனர். இந்த உண்மை, உணவை வீணாக்குவோருக்கு புரிவதில்லை.
நாம் வேண்டாம் என, வீசியெறியும் உணவால், பலரின் வயிற்றை நிரப்பலாம்.
மிச்சமான உணவை சேகரித்து சென்று, ஆதரவற்றோரின் வயிற்றை நிரப்பும் உன்னதமான சேவையை, மைசூரை சேர்ந்த, திருப்தி பாத்திர சேனை என்ற தன்னார்வ அமைப்பினர் செய்கின்றனர்.
இந்த அமைப்பினர் தினமும் பல இடங்களில் வீணாகும் உணவை சேகரித்து, ஆதரவற்றோருக்கு வழங்குகின்றனர். பார்ட்டி ஹால், பிறந்த நாள் விழா, திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் என, எங்கு உணவு மிச்சமாகியுள்ளது என, தகவல் வந்தாலும், அமைப்பினர் உடனடியாக தங்களின் வாகனத்தில் அங்கு சென்று, உணவை பெறுகின்றனர்.
இது போன்று பெறப்படும் உணவை, அப்படியே ஆதரவற்றோருக்கு வழங்குவது இல்லை. உணவு தரமானதா, சாப்பிட தகுதியானதா என்பதை பரிசோதித்து, உறுதிப்படுத்துகின்றனர். அதன் பின், சுத்தமாக 'பேக்கிங்' செய்து, தினமும், 500க்கும் மேற்பட்டோருக்கு வழங்குகின்றனர்.
சாலை ஓரங்களில் பசியோடு அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு மட்டுமின்றி, மைசூரின் மாவட்ட மருத்துவமனை, கே.ஆர்.மருத்துவமனை, ஆதரவற்றோர் இல்லங்கள், ஆதரவற்றோர் அடைக்கல மையங்களில் உள்ளவர்களுக்கும், உணவு வழங்குகின்றனர்.
மருத்துவமனைகளில் நோயாளிகளை சேர்த்து விட்டு, உறவினர்கள், குடும்பத்தினர் வளாகத்தில் தங்கியுள்ளனர். உணவு வாங்க பணம் இல்லாமல், பசியோடு நாட்களை கடத்துகின்றனர். இத்தகையவர்களுக்கு, இந்த தொண்டு அமைப்பினர் உணவு வழங்கி, பசியை போக்குகின்றனர்.
மிச்சமான உணவு, குப்பை கூடைக்கு செல்வதை விட, பசித்தவர்களின் வயிற்றை நிரப்ப வேண்டும் என்பது, இந்த அமைப்பினரின் குறிக்கோள். கடந்த நான்கு ஆண்டுகளாக, எந்த விதமான பிரதிபலனும் எதிர்பார்க்காமல், மற்றவரின் பசியை போக்கும் அமைப்பினரின் சேவை மகத்தானது. இது போன்ற தன்னார்வ சேவகர்களை அடையாளம் கண்டு, ஊக்கப்படுத்த மாநில அரசு முன் வர வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.
