தங்கச்சுரங்க தொழிலாளிக்கு சிறந்த சமூக சேவகர் விருது
தங்கச்சுரங்க தொழிலாளிக்கு சிறந்த சமூக சேவகர் விருது
ADDED : பிப் 01, 2026 05:03 AM

பெங்களூரு: தங்கவயல் சமூக சேவகருக்கு, பெங்களூரு, 'சித்ர சந்தே' அமைப்பினர் நேற்று விருது வழங்கி கவுரவித்தனர்.
தங்கவயலில் தங்கச் சுரங்க தொழிலாளியாக பணியாற்றியவர் தசரதன் என்ற பீட்டர். தமிழரான இவர், ஜாதி, மதம், மொழி, இவைகளை கடந்து மனித நேயத்துடன் எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், இதுவரை, 5,000த்துக்கும் அதிகமான மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்க உதவிகள் பெற்று தந்துள்ளார். மாணவர்கள் தங்கள் வாழ்வில் சிறந்து விளங்க கல்வி மட்டுமே மார்க்கம் என்பதையும் உணர்த்தி வருகிறார்.
விதவைகள் மற்றும் முதியோர்கள் அரசிடம் இருந்தும், தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் தேவையான உதவிகளை பெற வழிகாட்டுகிறார். குறிப்பாக, இதய நோயாளிகள், புற்றுநோய் பாதித்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தி, மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். அத்துடன், அவ்வப்போது மருத்துவ முகாம்களையும் நடத்தி வருகிறார்.
இவரின் சேவையை பாராட்டி, இந்தாண்டு குடியரசு தின விழாவில், அயோத்தியின், 'ட்ரீட் டியாக்' அமைப்பும், தமிழகத்தின் நாமக்கல் நகரைச் சேர்ந்த, 'மக்கள் உரிமை சமூக சேவை இயக்கமும்' இணைந்து, சிறந்த சேவையாளர் விருதை வழங்கின.
நேற்று பெங்களூரு சதாசிவா நகரில் உள்ள ஹைட் பார்க்கில், 'சித்ர சந்தே' அமைப்பினர், சிறந்த சமூக சேவையாளர் விருதை தசரதனுக்கு வழங்கி கவுரவித்தனர்.
