/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிய பள்ளிகள் துவக்குவதற்கான விதிகளை தளர்த்த அரசு முடிவு
/
புதிய பள்ளிகள் துவக்குவதற்கான விதிகளை தளர்த்த அரசு முடிவு
புதிய பள்ளிகள் துவக்குவதற்கான விதிகளை தளர்த்த அரசு முடிவு
புதிய பள்ளிகள் துவக்குவதற்கான விதிகளை தளர்த்த அரசு முடிவு
ADDED : மார் 03, 2026 06:18 AM
பெங்களூரு: தனியார் பள்ளிகள் துவக்குவதற்கான விதிமுறைகளை தளர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
புதிய பள்ளிகள் துவக்குவது மற்றும் ஏற்கனவே உள்ள பள்ளிகளின் உரிமத்தை புதுப்பிப்பது தொடர்பாக, கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இதனால், புதிய பள்ளிகள் துவக்கம் மற்றும் உரிமங்களை புதுப்பிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதனால், விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
அதாவது, புதிதாக பள்ளிகள் திறக்க வேண்டுமானால், தேவையான நிலத்தை கல்வி நோக்கத்துக்கு என, வருவாய் துறையிடம் நில பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். அனைத்து திசைகளில் இருந்தும் அந்த இடத்துக்கு சாலை வசதி இருக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலம், நிர்ணயித்த பரப்பளவில் இருக்க வேண்டும் என்ற, விதிமுறைகள் இருந்தன.
அத்துடன், பள்ளிகளில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க, தீ விபத்தை தடுக்கும் பாதுகாப்பு சாதனம் இருப்பது கட்டாயம். அத்துடன் பள்ளி கட்டடம் பாதுகாப்பாக உள்ளது; தீ விபத்தை தடுக்கும் வசதிகள் உள்ளன என, அந்தந்த துறைகளிடம் சான்றிதழ் பெற்று, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் அடிப்படையில் தான், இந்த விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்த கடுமையான விதிமுறைகள், ஊழலுக்கு வழி வகுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, பெலகாவி சட்டசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, விதிகளை எளிமையாக்க தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஆய்வு செய்ய கமிட்டியும் அமைக்கப்பட்டு, அந்த கமிட்டி பரிந்துரைகளையும் அளித்தது. அதன்படி, சில விதிமுறைகளை தளர்த்த கல்வித்துறை தயாராகிறது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளன.
இனி புதிய பள்ளிகள் துவக்க வேண்டும் எனில், நிலத்தின் இ - பட்டா இருந்தால் போதும். கல்வி நோக்கத்துக்கு என, நிலத்தை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் நீக்கப்படும். பள்ளி கட்டட பாது காப்பு, தீத்தடுப்பு சான்றிதழ்களை தனியார் பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டியதில்லை. அதற்கு பதிலாக சம்பந்தப்பட்ட துறைகளிடம், கல்வித்துறையே அந்தச் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளும். புதிய விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வரும்.
இவ்வாறு கூறினர்.

