/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் அணிய தடை
/
அரசு ஊழியர்கள் ஜீன்ஸ் அணிய தடை
ADDED : டிச 21, 2025 05:21 AM
பெங்களூரு: 'அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், நாகரிகம் என்ற பெயரில், கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிந்து வரக்கூடாது. கண்ணியமாக உடை அணிய வேண்டும்' என, கர்நாடக அரசின் ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, அந்த துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கை:
கார்ப்பரேட் நிறுவனங்களை போன்று, அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாடு இல்லை.
அதனால், சில அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கல்லுாரிக்கு செல்வோரை போன்று, நாகரீக உடை அணிந்து கொண்டு, அலுவலகத்துக்கு வந்து பணியாற்றுவதாக புகார்கள் வந்துள்ளன.
கண்ணியமாக உடையணிந்து வரும்படி, ஏற்கனவே பல முறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை பலரும் பின்பற்றவில்லை. கிழிந்த ஜீன்ஸ், இறுக்கமான உடை, ஸ்லீவ்லெஸ் உடையணிந்து அலுவலக பணிக்கு வருவது ஏற்புடையது அல்ல. இனி ஸ்லீவ்லெஸ் உடைகள், இறுக்கி பிடிக்கும் உடை, கிழிந்த ஜீன்ஸ் அணிந்து பணிக்கு வரக்கூடாது. கண்ணியமான உடைகளை அணிந்திருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உத்தரவு அனைத்து துறைகளின் முக்கியஸ்தர்கள், மாவட்ட கலெக்டர்கள், முதல்வர் அலுவலகம், தலைமை செயலர்கள், பொது செயலர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் நிர்வாக அதிகாரிகள் உட்பட அனைத்து அரசு அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஊழியர் மற்றும் நிர்வாக மேம்பாட்டு துறை வெளியிட்ட சுற்றறிக்கையை, கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் ஷடக்ஷரி வரவேற்றுள்ளார். 'அரசு ஊழியர்கள் அணியும் உடைகள், மற்றவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது. அரசு அலுவலகங்களில் ஒழுங்கு, கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

