/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு பொறியாளர் அலுவலகம் 'ஜப்தி'
/
அரசு பொறியாளர் அலுவலகம் 'ஜப்தி'
ADDED : நவ 19, 2025 09:10 AM

மாண்டியா: கால்வாய் மேம்பாட்டுப் பணிக்கு நிலம் வழங்கிய விவசாயிக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் தாமதம் செய்த பொறியாளர் அலுவலகத்தின் பொருட்கள் நீதிமன்ற உத்தரவை அடுத்து, ஜப்தி செய்யப்பட்டது.
மாண்டியா மாவட்டம், மத்துார் தாலுகாவில் உள்ள ஹெப்தார்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜவரே கவுடா; விவசாயி. இவருக்கு சொந்தமான 1.17 ஏக்கர் நிலம், கால்வாய் மேம்பாட்டுப் பணிக்காக காவிரி நீர்ப்பாசன கழகத்தால் 2022ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது.
இதற்கு இழப்பீடாக ஜவரே கவுடாவுக்கு எதுவும் வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து, கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் ஜவரே கவுடா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, விவசாயிக்கு 84 லட்சம் ரூபாய் இழப்பீட்டை காவிரி நீர்ப்பாசன கழகம் வழங்கும்படி தீர்ப்பளித்தார். மத்துார் கிராமத்தில் உள்ள காவிரி நீர்ப்பாசன கழக நிர்வாக பொறியாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இழப்பீடு பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதுபற்றி நீதிமன்றத்தில் ஜவரே கவுடா முறையிட்டார். இதையடுத்து அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நேற்று மத்துாரில் உள்ள காவிரி நீர்ப்பாசன கழக நிர்வாக பொறியாளர் அலுவலகத்துக்கு வந்த நீதிமன்ற அதிகாரி முன்னிலையில், அலுவலக பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அலுவலகத்தில் இருந்த நகல் எடுக்கும் இயந்திரங்கள், கணினிகள் என அனைத்தையும் ஜப்தி செய்து, நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

