ADDED : அக் 25, 2025 05:22 AM
பெங்களூரு: ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கும்படி, உயர்நீதிமன்றத்தில், அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, பாரதிநகர் ரவுடி சிவகுமார் கொலை வழக்கில், கே.ஆர்.புரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., பைரதி பசவராஜ் ஐந்தாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, அவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி சஞ்சய் தத் விசாரிக்கிறார். இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது, அவரை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று நடந்த விசாரணையின்போது, தடை உத்தரவை நீக்கக் கோரி, அரசு தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எம்.எல்.ஏ., தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
'தன் மனுதாரர் எந்த நேரத்திலும் விசாரணைக்கு ஆஜராக தயாராக உள்ளார்' என, அவர் சார்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான அடுத்த விசாரணையை 30ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

