ADDED : அக் 25, 2025 05:22 AM
ஷிவமொக்கா: கணவர் குடும்பத்தினரின் தொந்தரவு தாங்க முடியாமல், திருமணமான ஆறே மாதங்களில், மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஷிவமொக்கா நகரின், கரம்பள்ளியின், கூஜானுமக்கி கிராமத்தில் வசிப்பவர் அசோக், 27. இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு, மாலாஸ்ரீ, 22, என்பவருடன் திருமணம் நடந்தது.
திருமணமான நாளில் இருந்தே, மனைவியை கணவர் நிம்மதியாக வாழ விடவில்லை. யாருடனும் பேசக்கூடாது என, கட்டுப்பாடு விதித்தார்.
தாய் வீட்டுக்கு செல்லக் கூடாது. போனிலும் பேசவிடவில்லை. தாய் வீட்டுக்குச் சென்றால், கணவருடன் தான் செல்ல வேண்டும். அவருடனேயே திரும்ப வேண்டும். சிறிது நேரமும் அங்கிருக்க முடியாது. கணவரின் இத்தகைய தொல்லைகளால், மனம் வருந்திய மாலாஸ்ரீ, நான்கு நாட்களுக்கு முன்பு, விஷம் குடித்தார்.
சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகளின் தற்கொலைக்கு அவரது கணவர் அசோக்கும், மாமியாரும் காரணம் என, மாலாஸ்ரீயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். கும்சி போலீசார் அசோக்கை கைது செய்தனர்.

