ADDED : ஜூன் 17, 2026 01:00 AM
பெலகாவி: அரசு உயர்நிலைப்பள்ளி, 10ம் வகுப்பு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரை, 'சஸ்பெண்ட்' செய்து பொது கல்வி துணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
பெலகாவி மாவட்டம் சிக்கோடியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு மாணவியரை தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி, ஐந்துக்கும் மேற்பட்ட மாணவியருக்கு, கன்னட பாட ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இவ்விஷயத்தை, தங்களின் பெற்றோரிடம் மாணவியர் தெரிவித்தனர். கோபமடைந்த பெற்றோர், நேற்று பள்ளிக்கு நுழைந்து, ஆசிரியரை சரமாரியாக தாக்கினர்.
தகவல் அறிந்த சிக்கோடி போலீசார் பள்ளிக்கு வந்து, ஆசிரியரை மீட்டனர். பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, அவரை கைது செய்தனர்.
தகவல் அறிந்த மாவட்ட எஸ்.பி., சீதாராம், பள்ளி மாணவியர், பெற்றோர், பள்ளி முதல்வரிடம் விசாரித்தார். பின், அவர் கூறுகையில், ''பெற்றோரிடம் தகவல் பெற்றுள்ளோம். இத்தகைய சம்பவம் நடந்திருக்க கூடாது. எதிர்காலத்தில் மீண்டும் நடக்காது,'' என்றார்.
இதற்கிடையே, டி.டி.பி.ஐ., எனும் பொது கல்வி துணை இயக்குனர் அலுவலகம் அந்த ஆசிரியரை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டு உள்ளது.
