ADDED : மே 06, 2026 11:53 PM
பெங்களூரு: ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள, ஐந்து மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகிறது. இது தொடர்பாக, நாளை ஜி.பி.ஏ., அதிகாரிகளுடன், ஆலோசனை நடக்கவுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி, கடந்த 2020ன் செப்டம்பர் 10ல், முடிவுக்கு வந்தது. அதன்பின் இதுவரை தேர்தல் நடக்கவில்லை.
அதிகாரிகளின் நிர்வகிப்பில் மாநகராட்சி செயல்படுகிறது. பெங்களூரு மாநகராட்சி தற்போது ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாற்றப்பட்டு, ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வார்டுகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் ஆறு ஆண்டுகளாக, தேர்தல் நடத்தாதது குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
வரும் ஜூன் இறுதிக்குள் தேர்தலை நடத்தும்படி, மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
ஏற்கனவே வார்டுகள் மறு சீராய்வு, இ ட ஒதுக்கீடு நிர்ணயம் முடிந்துள்ளது. வாக்காளர் பட்டியலும் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் தேதியை அறிவிப்பது தொடர்பாக, ஜி.பி.ஏ., உறுப்பினர்களுடன், தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளது. 86 உறுப்பினர்கள் அடங்கிய ஜி.பி.ஏ., கமிட்டியில் முதல்வர், துணை முதல்வர், ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர், ஐந்து மாநகராட்சிகளின் கமிஷனர்கள், பெங்களூரின் 28 சட்டசபை தொகுதிகளின் எம்.எல்.ஏ.,க்கள், - எம்.பி.,க்கள், - எம்.எல்.சி.,க்கள், ராஜ்யசபா எம்.பி.,க்கள், அதிகாரிகள் உள்ளனர்.
இவர்கள், நாளைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பர். அனைவரின் கருத்துகள், ஆலோசனைகள் கேட்டறிந்து, தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். ஜி.பி.ஏ., தேர்தலுக்காக தேர்தல் ஆணையம் இரண்டு தேதிகளை தேர்வு செய்துள்ளது. இந்த தேதிகளை நாளை அறிவித்து, ஒப்புதல் பெற்று தேதி முடிவு செய்யும்.
பல விஷயங்கள் ஓட்டுச்சாவடி அமைப்பது, ஓட்டுச்சாவடி ஊழியர்களுக்கு பயிற்சி, ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அமைப்பது, பாதுகாப்பு அறை வசதி, தேர்தல் பிரசாரம் செய்ய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிப்பது உட்பட, அனைத்து விஷயங்கள் குறித்தும், நாளை ஆலோசிக்கப்படும்.
ம.ஜ.த.,வை தவிர, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்களுக்கு ஜி.பி.ஏ., வுக்கு தேர்தல் நடப்பதில், விருப்பம் இல்லை. ஏதேதோ கார ணம் கூறி, தேர்தலை தள்ளி வைக்க முயற்சித்தனர். ஆனால் ஜூன் 30க்குள், ஜி.பி.ஏ., கட்டுப்பாட்டில் உள்ள ஐந்து மாநகராட்சிகளுக்கு, தேர்தல் நடத்த வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உறுதியாக உத்தரவிட்டுள்ளதால், தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது.
ஜி.பி.ஏ., தேர்தல் நடத்த ஊழியர்கள் இல்லை. ஜி.பி.ஏ., உட்பட, பல்வேறு துறைகளின் ஊழியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளனர் என, உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அபிடெவிட் தாக்கல் செய்துள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் இருந்து, எந்த உத்தரவும் வராததால், தேர்தலுக்கு ஆணையம் தயாராகிறது.
