ADDED : மே 09, 2026 02:20 AM

பெங்களூரு: ''ஜி.பி.ஏ., தேர்தல் அடுத்த மாதம் 14 முதல் 24ம் தேதிக்குள் நடத்தப்பட உள்ளது. அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்,'' என, மாநில தேர்தல் கமிஷனர் சங்ரேஷி தெரிவித்து உள்ளார்.
பெங்களூரு மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் ஆட்சி, 2020 செப்டம்பர் 10ல் முடிவுக்கு வந்தது. அதன் பின், தேர்தல் நடக்கவில்லை. அதிகாரிகள் நிர்வகிப்பில் மாநகராட்சி செயல்படுகிறது. பெங்களூரு மாநகராட்சி தற்போது ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாறப்பட்டு, ஐந்து மாநகராட்சிகளாக பிரிக்கப்பட்டன.
ஜூன் 30ம் தேதிக்குள் தேர்தல் நடத்தும்படி மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாரானது.
தேர்தலை நடத்த ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஜி.பி.ஏ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், தேர்தல் நடப்பது கேள்விக்குறியானது. தேர்தல் நடக்குமா என்ற பல கேள்விகளுக்கு, பதிலாக நேற்று மாநில தேர்தல் கமிஷனர் சங்ரேஷி அளித்த பேட்டி:
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின்படி ஜூன் 30ம் தேதிக்குள், ஜி.பி.ஏ., தேர்தலை நடத்த வேண்டும். எனவே, தேர்தலை ஒத்திவைக்க வாய்ப்பில்லை.
ஜூன் 14 முதல் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த கால கட்டத்திற்குள் ஏதாவது ஒரு தேதி தேர்வு செய்யப்படும்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன், அனைத்து மாநகராட்சி கமிஷனர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். இதன் பின்னர், அதிகாரப்பூர்வ தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
தேதியை தன்னிச்சையாகவே அறிவிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம். தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு உள்ளன.
தேர்தலில் ஓட்டுப்பதிவுக்கு மின்னணு இயந்திரமா அல்லது ஓட்டுச்சீட்டா என்பது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
