மக்கள் தொகை கணக்கெடுப்பால் ஜி.பி.ஏ., தேர்தல்... தள்ளிவைப்பு?: வெற்றி கேள்விக்குறியாகும் பீதியில் காங்., திட்டம்
மக்கள் தொகை கணக்கெடுப்பால் ஜி.பி.ஏ., தேர்தல்... தள்ளிவைப்பு?: வெற்றி கேள்விக்குறியாகும் பீதியில் காங்., திட்டம்
ADDED : ஏப் 15, 2026 03:37 AM

கடந்த 2020 செப்டம்பர் 10ம் தேதி, பெங்களூரு மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பதவி காலம் முடிந்தது. தேர்தல் நடத்தி புதிய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க, மாநில தேர்தல் ஆணையம் தயாராக இருந்தது.
கொரோனா
ஆனால், அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால், அன்றைய பா.ஜ., அரசு, தேர்தல் நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. தொற்று பரவும் அபாயம் உள்ளதாக காரணம் காட்டி, தேர்தலை தள்ளி வைத்தது. பெங்களூரு மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தது.
அதன்பின், தேர்தல் கிடப்பில் போட்டது. பா.ஜ.,வுக்கு பின் ஆட்சிக்கு வந்த காங்கிரசும், மாநகராட்சிக்கு தேர்தல் நடத்துவதில் அக்கறை காட்டவில்லை.
இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை பொருட்படு த்தாமல், மாநில அரசு பெங்களூரு மாநகராட்சியை, கிரேட்டர் பெங்களூரு ஆணையமாக மாற்றி, ஐந்து மாநகராட்சிகளாக பிரித்துள்ளது. வார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சியாக இருந்த போதே, முன்னாள் கவுன்சிலர்கள் சிலர் தேர்தல் நடத்தும்படி, உச்ச நீதிமன்றம் வரை சென்று சட்ட போராட்டம் நடத்தினர். மாநில அரசும் பல்வேறு காரணங்களை காட்டி, தேர்தலை தள்ளி வைத்து வந்தது.
உச்ச நீதிமன்றம்
இறுதியாக, உச்ச நீதிமன்றம், அரசு மீது கடும் அதிருப்தி தெரிவித்து, நடப்பாண்டு ஜூன் இறுதிக்குள் தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டது. எனவே, அரசு தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது.
பொதுவாக பெங்களூரின் பல தொகுதிகள், பா.ஜ.,வின் பாதுகாப்பு கோட்டையாக உள்ளன. வாக்காளர்களிடம் இக்கட்சிக்கு தனிப்பட்ட செல்வாக்கு உள்ளது.
இவர்கள், காங்., அரசின் வாக்குறுதி திட்டங்களை பொருட்படுத்த மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் நடந்தால், வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி, ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது.
மற்றொரு பக்கம் ஜி.பி.ஏ., தேர்தலில், ம.ஜ.த.,வுடன் கை கோர்ப்பதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பதை, பா.ஜ., மேலிடம் இன்னும் முடிவு செய்யவில்லை. பா.ஜ.,வின் முடிவுக்காக ம.ஜ.த., காத்திருக்கிறது.
உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நெருங்கும் நிலையில், ஜி.பி.ஏ., தேர்தலை தள்ளி வைக்க மீண்டும் முயற்சி நடக்கிறது. அதாவது, மத்திய அரசு சார்பில், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கணக்கெடுப்பு பணிக்கு அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஜி.பி.ஏ., அதிகாரிகள், ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், ஜி.பி,ஏ., வுக்கு தேர்தல் நடத்தினால், ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்படும்.
தலைமை கமிஷனர்
ஏற்கனவே பல ஊழியர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே தேர்தலை நடத்துவது கஷ்டம்.
அது மட்டுமின்றி, வார்டுகளின் எல்லையை அடையாளம் காணும் பணி, இன்னும் முடியவில்லை, இதற்கு கூடுதல் கால அவகாசம் தேவை. எனவே, ஜூன் மாதம் தேர்தலை நடத்துவதில் சிரமங்கள் ஏற்படும் என காங்., அரசு கருதுகிறது.
இதையே காரணமாக கூறி, தேர்தலை தள்ளி வைக்கும்படி, மாநில அரசின் நகர வளர்ச்சி துறைக்கு கடிதம் எழுத ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர் ராவ் திட்டமிட்டுள்ளார்.
ஜி.பி.ஏ., தலைமை கமிஷனரின் கடிதத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தேர்தலை தள்ளி வைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை மாநில அரசின் தாமதத்தை, உச்ச நீதிமன்றம் கண்டித்து தேர்தலை நடத்தும்படி உத்தரவிட்டால், வேறு வழியின்றி ஜூனிலேயே தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.
