/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகளிர் தசராவில் கடை வைத்த பெண்கள் சுய தொழிலுக்கு கைகொடுத்த 'கிரஹலட்சுமி'
/
மகளிர் தசராவில் கடை வைத்த பெண்கள் சுய தொழிலுக்கு கைகொடுத்த 'கிரஹலட்சுமி'
மகளிர் தசராவில் கடை வைத்த பெண்கள் சுய தொழிலுக்கு கைகொடுத்த 'கிரஹலட்சுமி'
மகளிர் தசராவில் கடை வைத்த பெண்கள் சுய தொழிலுக்கு கைகொடுத்த 'கிரஹலட்சுமி'
ADDED : செப் 27, 2025 04:53 AM
'கிரஹலட்சுமி' திட்டத்தின் பயனாளிகள், சுய தொழில் செய்கின்றனர். மைசூரில் தசராவையொட்டி கடைகள் வைத்து, சம்பாதிக்கின்றனர்.
கர்நாடக காங்கிரஸ் அரசு, செயல்படுத்திய ஐந்து வாக்குறுதி திட்டங்களில், 'கிரஹலட்சுமி' திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்துகின்றனர். வீட்டு பயன்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குகின்றனர்; பிள்ளைகளுக்காக செலவிடு கின்றனர்.
சில பெண்கள், மாதந்தோறும் கிடைக்கும் தொகையை சேமித்து வைத்து, அத்தியாவசிய தேவை ஏற்படும்போது பயன்படுத்துகின்றனர். தசராவையொட்டி, மைசூரில் பல்வேறு இடங்களில் தற்காலிக கடைகள் வைத்துள்ளனர். கிரஹலட்சுமி பயனாளிகளும் சேர்த்து வைத்த பணத்தை, முதலீடாக்கி கடைகள் வைத்துள்ளனர்.
மகளிர் தசரா மைசூரில் 'மகளிர் தசரா' என்ற பெயரில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பெண்கள் பலரும் சிற்றுண்டி, தின்பண்டங்கள் கடைகள், வளையல் கடை உட்பட பல்வேறு கடைகள் திறந்துள்ளனர். ஹெச்.டி.கோட்டேவை சேர்ந்த சிந்து என்பவர், 'கிரஹலட்சுமி' பணத்தை ஆறு மாதங்களாக சேமித்து வைத்திருந்தார். இந்த பணத்தை வைத்து, 'சாண்ட்விச் கார்னர்' என்ற பெயரில், தின்பண்ட கடை வைத்து வியாபாரம் செய்கிறார்.
பார்வையற்ற ஸ்ருதி என்பவர், சேமித்து வைத்த பணத்தில் பேன்சி பொருட்கள் கடை வைத்துள்ளார். பெண்கள் குழு அமைத்து, தாங்களே தயாரித்த பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். கேழ்வரகு முறுக்கு, கேழ்வரகு மிக்சர், தட்டை என, பலவிதமான தின்பண்டங்கள் விற்கின்றனர்.
மைசூரின், விஜயநகரில் வசிக்கும் ககன தீபிகா என்பவர், கிரஹலட்சுமி பணத்தில் உடைகள் வாங்கி வந்து, மகளிர் தசராவில் விற்கிறார்.
இது குறித்து, மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறியதாவது:
மகளிர் தசராவில், பெண்களுக்காக 40க்கும் மேற்பட்ட கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மகளிர் சங்கங்களின் உறுப்பினர்கள், தங்களின் வீட்டில் தயாரித்த நொறுக்கு தீனிகள், தின்பண்டங்கள், அப்பளம், ஊறுகாய், பேன்சி நகைகள், சேலைகள் உட்பட, பல்வேறு பொருட்களை விற்று, பணம் சம்பாதிக்கின்றனர்.
தன்மானம் கிரஹலட்சுமி தொகையை, பெண்கள் சேமித்து வைத்து, மகளிர் தசராவில் கடைகள் திறந்து, வியாபாரம் செய்வதை காணும்போது, மனம் மகிழ்ச்சி அடைகிறது. பெண்கள் யாரையும் சார்ந்திராமல், சுய தொழில் செய்து, தன்மானத்துடன் வாழ ஊக்கப்படுத்துவதே, அரசின் சாதனையாகும் .
இவ்வாறு அவர் கூறினார்.
சிந்து கூறியதாவது:
'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ், மாதந்தோறும் எனக்கு கிடைத்த 2,000 ரூபாயை சேமித்து வைத்திருந்தேன். ஏதாவது வியாபாரம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
மகளிர் தசராவில், கடை வைக்க எனக்கு அனுமதி கிடைத்தது. தின்பண்டங்கள் கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். இங்கு நல்ல முறையில் வியாபாரம் செய்து, சம்பாதிக்கும் பணத்தை வைத்து, எங்கள் ஊரில் சொந்தமாக தொழில் துவங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.