ADDED : மே 09, 2026 11:54 PM

பெங்களூரு உட்பட அனைத்து நகரங்களிலும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது, குப்பை பிரச்னையே. குறிப்பாக திடக்கழிவில் பெருமளவில் குவியும் கண்ணாடி பாட்டில், பொருட்களை அழிப்பது உள்ளாட்சிகளுக்கு, பெரும் சவாலாக உள்ளது. ஆனால், புத்துாரின் ஆர்யாபு கிராம பஞ்சாயத்து, கண்ணாடிகளை மணலாக மாற்றி, மற்ற மாநகராட்சிகளுக்கு முன் மாதிரியாக உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தாலுகாவின் ஆர்யாபு கிராம பஞ்சாயத்து பகுதிகளில், தினமும் கிலோ கணக்கில் குவியும் கண்ணாடி பாட்டில்கள், பொருட்களை அழிப்பது பிரச்னையாக இருந்தது.
இதற்கு என்ன தீர்வு என, ஆலோசித்த போது, கண்ணாடிகளை மணலாக மாற்ற முடியும் என்ற தகவலை, சமூக வலை தளத்தில் அறிந்தனர். ஆனால் கண்ணாடிகளை மணலாக்கும் இயந்திரத்தை வாங்க, கிராம பஞ்சாயத்தில் பணம் இல்லை.
ரூ.4.25 லட்சம்
இதற்காக பஞ்சாயத்து நிர்வாகம், தான் கணக்கு வைத்துள்ள வங்கியை தொடர்பு கொண்டது. வங்கியும் கார்ப்பரேட் பொது பொறுப்பு நிதியில் இருந்து, 4.25 லட்சம் ரூபாய் வழங்கியது.
இந்த பணத்தில் கிராம பஞ்சாயத்து, 2023ல் தமிழகத்தின் கோவையில் இருந்து, கண்ணாடியை மணலாக்கும் அதிநவீன இயந்திரத்தை வாங்கியது.
இந்த இயந்திரம் சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது. முதலில் கண்ணாடி பாட்டில்கள் நிறம் வாரியாக தனியாக பிரிக்கப்படுகிறது. அதன் பின், பாட்டில்கள் இயந்திரத்துக்குள் போடப்படுகின்றன.
சில நிமிடங்களில் இவை மணலாக வெளியே வருகிறது. 200 பாட்டில்களில் இருந்து, 40 முதல், 100 கிலோ வரை மணல் உற்பத்தியாகிறது. திடக்கழிவில் கண்ணாடி அளவு 80 முதல், 90 சதவீதம் வரை குறைகிறது.
கண்ணாடி பாட்டில்களை மணலாக உற்பத்தி செய்து, மற்ற உள்ளாட்சிகளுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது.
இயற்கை மணல் இது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகள் கூறியதாவது:
கண்ணாடி பாட்டில்கள், தம்ளர்கள் உட்பட பல்வேறு விதமான கண்ணாடிகளை இயந்திரத்தில் போட்டு மணல் உற்பத்தி செய்கிறோம். இதை கோணிப்பைகளில் நிரப்பி, சேகரித்து வைக்கிறோம். இதை, இயற்கை மணலுடன், 10 முதல், 45 சதவீதம் கலந்து, கான்கிரீட் போடுவது, சாலை அமைப்பது, செங்கல் தயாரிப்பது என, பல பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
சோலார் மின்சாரத்தால், இந்த இயந்திரம் இயங்குகிறது. மின் கட்டணம் மிச்சமாகிறது. இதற்கு வெளி மார்க்கெட்டில், நல்ல டிமாண்ட் உள்ளது. எங்கள் கிராம பஞ்சாயத்து, மாநிலத்துக்கே முன் மாதிரியாக செயல்படுகிறது. மணலை விற்பனை செய்வதால், பஞ்சாயத்து மாதந்தோறும் ஒரு லட்சம் ரூபாய் வருவாயும் கிடைக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
