சமூக வலைதளம் பயன்படுத்த தடை வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியீடு
சமூக வலைதளம் பயன்படுத்த தடை வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியீடு
ADDED : மார் 24, 2026 06:21 AM

பெங்களூரு: ''கர்நாடகாவில், 16 வயதுக்கு உட்பட்டோர், சமூக வலைதளங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் வெளியிடப்படும்,'' என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா மேலவையில் கூறினார்.
கர்நாடகாவில், 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என, மாநில அரசு சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இதுகுறித்து, நேற்று மேலவையில் பா.ஜ., உறுப்பினர் பிரதாப் சிம்ஹா நாயக் கேள்வி எழுப்பினார். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா அளித்த பதில்:
பதினாறு வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என, ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுத்த முதல் மாநிலமாக கர்நாடகா இருக்கிறது. சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் நன்மை, தீமை இரண்டுமே உண்டு. அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.
மொபைல் போன்களை உபயோகிப்பதன் மூலம் குழந்தைகள் நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், தவறான பழக்க வழக்கங்கள், நேரத்தை விரயமாக்கும் வகையிலேயே, பல குழந்தைகள் மொபைல் போன்களை பயன்படுத்துகின்றன. இது, அவர்கள் பாடம் கற்பதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது. எனவே, சமூக வலைதளங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
சமூக வலைதளங்கள் பயன்பாடு தடையை எப்படி அமல்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன. அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என அனைவரிடமும் ஆலோசனை கேட்கப்பட்டு வருகிறது. இறுதியாக அனைவருடன் ஆலோசித்த பின் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும். பெரும்பாலும் அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
