நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாக்கும் குருபரஹள்ளி கிராமம்
நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாக்கும் குருபரஹள்ளி கிராமம்
ADDED : ஏப் 11, 2026 11:55 PM

கிராம பகுதிகளில் திருவிழாக்கள் நடக்கும் போது, கரகாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் எல்லாம் பட்டையை கிளப்பும். கடந்த சில ஆண்டுகளாக என்னவோ தெரியவில்லை, நாட்டுப்புற கலைகள் அழிவு பாதையில் சென்று கொண்டு இருக்கின்றன.
இப்போது, டி.ஜே., பாடல், சென்ட மேளம் என்று இளைஞர்கள் மாறி விட்டனர். இதற்கு மத்தியில் நாட்டுப்புற கலைகளை அழியாமல் ஒரு கிராமமே பாதுகாத்து வருகிறது.
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் தாலுகாவில் உள்ளது குருபரஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாக்கும் வேலையில் கிராம மக்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும், ஒருவரை நாட்டுப்புற கலைஞராக உருவெடுக்க வைக்கின்றனர். யக் ஷகானா, தத்துவபாதம், பஜனை, நாட்டுப்புற பாடல்கள் படிப்பது, கோலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை மேம்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
கனகதாசர், புரந்தரதாசர், தியாகராஜர், கைவாரா தாத்தையா, முத்துராஜ்சாமி போன்றோரின் கீர்த்தனத்தையும், தத்துவ பாதையையும் எல்லாருக்கும் தெரியப்படுத்தும் வகையில், இந்த கிராமத்தில் வசித்த முதியோர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கூட்டம் நடத்துவர்.
கடந்த, 50 ஆண்டுகளாக கிராமத்தில் பஜனை தொடர்ந்து நடக்கிறது. இதன்மூலம் எங்கள் கிராமத்தின் நாட்டுப்புற கலை வளர்ந்து உள்ளது.
கலைகளை வளர்ப்பது மட்டுமின்றி பலர் படிப்பிலும் சிறந்து விளங்கி உள்ளனர். எங்கள் கிராமத்தில், 50 இன்ஜினியர்கள் இருக்கின்றனர். சிலர் அரசு வேலையிலும் உள்ளனர்.
மொபைல்போனில் இளம் தலைமுறையினர் அடிமையாகி விடக்கூடாது என்பதற்காக தான், நாட்டுப்புற கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறோம். பல அமைப்புகள் கிராமத்தின் கலைஞர்களை கவுரவித்து பாராட்டி உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
