கர்நாடகாவில் ஆலங்கட்டி மழை காஷ்மீராக மாறிய கலகடகி
கர்நாடகாவில் ஆலங்கட்டி மழை காஷ்மீராக மாறிய கலகடகி
ADDED : மார் 19, 2026 06:14 AM

பெங்களூரு: பெங்களூரு, பெலகாவி உட்பட கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால் சில அசம்பாவிதங்கள் நடந்தன.
பெலகாவி மாவட்டத்தில், பரவலாக மழை பெய்து வருகிறது. ஹுக்கேரி தாலுகாவின், சங்கேஷ்வரா சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பலத்த காற்றுடன் கூடிய, ஆலங்கட்டி மழை பெய்தது. இப்பகுதியில் வசிக்கும் சங்கர் கரஜகி, தன் நிலத்தில் இருந்த பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தார். ஆலங்கட்டி மழை பெய்ததில், 39 ஆடுகள் உயிரிழந்தன.
பெலகாவியின், ஹோசூரா கிராமத்தில் நேற்று முன்தினம் மாலை, பர்வீன், 34, கோழிகளை விற்பதற்காக, தன் கணவருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், பாழடைந்த வீட்டின் கீழே ஒதுங்கினர். அப்போது சுவர் இடிந்ததில், பர்வீன் உயிரிழந்தார். அவரது கணவர் ஷெரீப், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
ஹாவேரி மாவட்டத்திலும், கோடை மழை வெளுத்து வாங்கியது. ராணிபென்னுார், ஷிகாவி, சவனுார், பேடகி தாலுகாவின் கிராமங்களில், கனமழை கொட்டி தீர்த்தது.
தார்வாட் மாவட்டத்தில், ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. கலகடகி தாலுகாவில் ஆங்காங்கே ஐஸ்கட்டிகள் பரவியுள்ளன. இது காஷ்மீரை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்லாரி, பாகல்கோட், கதக், விஜயபுரா உட்பட, பல மாவட்டங்களிலும் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது.
பெங்களூரில் நேற்று மாலை, ஆலங்கட்டி மழை பெய்ததால், மக்கள் பாதிப்படைந்தனர். தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்ஜான் பண்டிகைக்காக பொருட்கள் வாங்க, மார்க்கெட்களுக்கு வந்தவர்கள், மழையில் சிக்கி கொண்டனர்.
கெங்கேரி, சாம்ராஜ்பேட், சிவாஜிநகர், பாபுஜி நகர், டவுன் ஹால், விதான்சவுதா உட்பட பல்வேறு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. பணி முடிந்து வீட்டுக்கு செல்லும் நேரத்தில், மழை துவங்கியதால் பலரும் பரிதவித்தனர். சாலைகள் ஏரிகளாக மாறின. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது.
' கர்நாடகாவில் அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
