/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹம்பி, கங்காவதி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
/
ஹம்பி, கங்காவதி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
ஹம்பி, கங்காவதி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
ஹம்பி, கங்காவதி கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
ADDED : பிப் 17, 2026 05:41 AM

கர்நாடகாவின் பல்லாரி மாவட்டம் ஹம்பி, யுனேஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக உள்ளது. இதனால், ஹம்பிக்கு அதிகளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
ஹம்பி மற்றும் அதனை சுற்றியுள்ள கொப்பால், கங்காவதி பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளில் தங்கி, சுற்றுலா தலங்களை பார்வையிடுகின்றனர். கடந்த ஆண்டு மார்ச், 3ம் தேதி, இஸ்ரேல் நாட்டை சேர்ந்த, 28 வயது இளம்பெண், கொப்பால் மாவட்டம் கங்காவதிக்கு சுற்றுலா வந்தார்.
கங்காவதியில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்தார். மார்ச், 6ம் தேதி இரவு, இஸ்ரேலிய இளம்பெண்ணையும், சுற்றுலா பயணியராக வந்து, ரிசார்ட்டில் தங்கி இருந்த அமெரிக்காவின் டேனியல், மஹாராஷ்டிராவின் பங்கஜ், ஒடிசாவின் பிபாஸ் ஆகியோரையும், ரிசார்டின் பெண் உரிமையாளர், கங்காவதி அருகே சனாபுரா கிராமத்தில் ஓடும் துங்கபத்ரா இடது கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றார். அங்கு அனைவரும் கித்தார் வாசித்துக் கொண்டு இருந்தனர்.
கால்வாயில் தள்ளினர் அப்போது, அங்கு குடிபோதையில் பைக்கில் வந்த, கங்காவதி நகரை சேர்ந்த மல்லா என்கிற ஹண்டி மல்லா, 23, சரண்சாய், 23, சரணபசவா, 23 ஆகிய மூன்று பேரும், நுாறு ரூபாய் கேட்டு பங்கஜ், பிபாஸ் மற்றும் டேனியலிடம் தகராறு செய்தனர். அவர்கள் பணம் கொடுக்க மறுத்ததால், மூன்று பேரையும் பிடித்து கால்வாயில் தள்ளி விட்டனர்.
அவர்கள் மேலே வரக்கூடாது என்பதற்காக, அவர்கள் மீது கல் வீசினர். அதனால், மூன்று பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதன்பின், இஸ்ரேலிய நாட்டு பெண் மற்றும் ரிசாட்டின் பெண் உரிமையாளரை, மூன்று பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தனர்.
அத்துடன், பணம், விலை உயர்ந்த கேமராக்களை எடுத்துக் கொண்டு தப்பினர். கால்வாயில் தள்ளி விடப்பட்ட மூன்று பேரில், பிபாஸ் நீரில் மூழ்கி இறந்தார். மற்ற இருவரும் நீந்தி கரை சேர்ந்தனர்.
பாதுகாப்பு இல்லை பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரில், மூன்று பேரையும் கங்காவதி போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதுடன், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கு, பாதுகாப்பு இல்லை என்ற செய்தியாக உருவெடுத்தது.
இச்சம்பவத்திற்கு பின், ஹம்பி, கங்காவதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் வருகையும் வெகுவாக குறைய ஆரம்பித்தது. நீண்ட நாட்களுக்கு பின், வழக்கம் போல சுற்றுலா பயணியர் வந்தனர்.
இதற்கிடையில், கைதான மூன்று பேர் மீதும், கங்காவதி கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மூன்று பேரும் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை, போலீஸ் தரப்பு தெளிவாக கொடுத்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் முதல் விசாரணை துவங்கியது.
வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில், மூன்று பேரும் குற்றவாளிகள் என, கடந்த 6ம் தேதி நீதிமன்றம் அறிவித்தது. தண்டனை விபரம், 16ம் தேதி வெளியிடப்படும் என்றும், நீதிபதி சதானந்த் நாகப்பா நாயக் கூறினார்.
11 மாதங்களில்.... தீர்ப்பு தினமான நேற்று காலையில் இருந்தே, நீதிமன்ற வளாகம் பரபரப்பாக இருந்தது. நீதிபதி என்ன தீர்ப்பை வழங்குவார் என, பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்று மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சதானந்த் நாகப்பா நாயக், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேருக்கும், கொலை, கூட்டு பலாத்காரம் தொடர்பாக பதிவான வழக்கில் மரண தண்டனையும்; தாக்குதல், கொள்ளை தொடர்பாக பதிவான வழக்கில், ஏழு ஆண்டு சிறை தண்டனையும் விதித்தார்.
இந்த தீர்ப்பால் நீதிமன்ற வளாகம் மேலும் பரபரப்பு அடைந்தது. தண்டனைக்கு ஆளான மூன்று பேரையும், போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். மரண தண்டனையை எதிர்த்து, மூன்று பேரும் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த 11 மாதங்களிலும், வழக்கை விசாரித்த, 9 மாதங்களிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விரைவாக விசாரித்து தீர்ப்பு கூறிய நீதிபதி, தேவையான சாட்சியங்களை சேகரித்து கொடுத்த, கொப்பால் போலீசாருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.

