sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 தீய சக்திகளை விரட்டியடிக்கும் ஹத்தினகல்லு ஆஞ்சநேயர்

/

 தீய சக்திகளை விரட்டியடிக்கும் ஹத்தினகல்லு ஆஞ்சநேயர்

 தீய சக்திகளை விரட்டியடிக்கும் ஹத்தினகல்லு ஆஞ்சநேயர்

 தீய சக்திகளை விரட்டியடிக்கும் ஹத்தினகல்லு ஆஞ்சநேயர்


ADDED : பிப் 10, 2026 04:09 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பில்லி, சூனியம், பேய், பிசாசு போன்ற தீயசக்திகளால் அவதிப்படுகிறீர்களா. வாழ்க்கை கசந்து விட்டதா; கவலை வேண்டாம். எப்படிப்பட்ட தீய சக்திகளாக இருந்தாலும் ஓட ஓட விரட்டி அடிக்கும் அபார சக்தி கொண்ட ஆஞ்சநேயர் கோவில் மாண்டியாவில் உள்ளது.

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், மக்களின் நம்பிக்கைகள் இப்போதும் மறையவில்லை. இந்த நம்பிக்கையால் சிலருக்கு நன்மை, சிலருக்கு தீமைகள் ஏற்படுகின்றன.

எதிரிகளால் மாந்த்ரீகம் ஏவப்பட்டு, வாழ்க்கையில் பல தொல்லைகளால் அவதிப்படுவோரும் உள்ளனர். இவர்களை சிக்கலில் இருந்து காப்பாற்றவே ஆஞ்சநேயர் குடிகொண்டுள்ளார்.

ஆஞ்சநேயர் + இந்திரஜித் மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின் பைரசந்திரா கிராமத்தில், ஹத்தினகல்லு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆஞ்சநேயருடன் ராவணனின் மகனான இந்திரஜித்தும் பூஜிக்கப்படுவது மற்றொரு சிறப்பாகும்.

தேத்ரா யுகத்தில் ராவணனின் மகனான இந்திரஜித், இந்திரஜால வித்தையில் கைதேர்ந்தவராக இருந்தார். இவர் ஹத்தினகல்லுவில் ஆஞ்சநேயருடன் சேர்ந்து, பக்தர்களின் குறைகளை போக்குவதாக ஐதீகம்.

தீவி னைகளால் பாதிக்கப்பட்டவர்கள், இங்கு வந்து பிரார்த்தனை செய்து கொண்டால், தீவினைகள் விலகி வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சிகளும் கிடைக்கும். பிரார்த்தனை நிறைவேறிய பின், மீண்டும் கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இயற்கை எழில் மிகுந்த இடம் என்பதால், சுற்றுலா பயணியரும் பெருமளவில் வருகின்றனர்.

சுற்றிலும் பாறைகளால் சூழப்பட்ட மலைகள், அதன் நடுவில் பச்சை பசேலென அழகிய காட்சிகள். இத்தகைய அற்புதமான இடத்தில் கோவில் உள்ளது.

எப்போதும் வாகன சத்தத்தை கேட்டு வெறுப்படைந்த மக்களின் மனதுக்கு அமைதி, நிம்மதியை அளிக்கும் புண்ணிய தலம் இதுவாகும். மன அமைதியை வேண்டி இங்கு வருவோர் அதிகம். இந்த ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டுமானால், சிறிது கஷ்டப்பட வேண்டும்.

பைரசந்திரா கிராமத்தின் ஹனுமந்தராயசுவாமி கோவிலின் பக்கத்து சாலையில், கரடு முரடான பாதையில் 1,000 படிகள் ஏறி சென்றால் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

80 அடி உயர ராஜகோபுரம் மலையில் ஏறி செல்லும் போது வானரங்கள் வரவேற்கும். நன்கொடையாளர்கள், பக்தர்களின் உதவியுடன் கோவில் சீரமைக்கப்பட்டது. திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரசுவாமி கோவில் மூலஸ்தான கோபுரம் போன்று, ஹத்தினகல்லு ஆஞ்சநேயர் கோவில் கோபுரமும், தங்க முலாம் பூசப்பட்ட தகடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கோவிலின் 80 அடி உயரமான ராஜகோபுரம், பக்தர்களை ஈர்க்கிறது. வேண்டுதல் நிறைவேறிய பின், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, பல்லக்கு உற்சவம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோவிலில் திருமணம் நடத்த விசாலமான மண்டபங்கள், ஹால்கள் கட்டப்பட்டுள்ளன.

மலை அடிவாரத்திலும், மேற்பகுதியிலும் பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலில் தினமும் பூஜை, புனஸ்காரங்கள் நடக்கின்றன. ஹனுமன் ஜெயந்தி, ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஆஞ்சநேயருடன், இந்திரஜித்துக்கும் பூஜை நடத்தப்படுகிறது. யாருக்காவது பேய், பிசாசு பிடித்திருந்தால், பில்லி, சூன்யத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இங்கு வந்து தரிசனம் செய்தால், அனைத்தும் விலகி ஓடும் என்பது, மக்களின் நம்பிக்கையாகும்.

ரயில், பஸ்

வசதி உண்டு

பெங்களூரில் இருந்து 125 கி.மீ., மைசூரில் இருந்து 68 கி.மீ., துமகூரில் இருந்து 88 கி.மீ., ராம்நகரில் இருந்து 76 கி.மீ., கோவில் உள்ளது. மாண்டியாவில் இருந்து 45 கி.மீ., தொலைவில் நாகமங்களா உள்ளது. இங்கிருந்து 23 கி.மீ., தொலைவில் ஹத்தினகல்லு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து நாகமங்களாவுக்கு, அரசு பஸ்கள், ரயில் வசதி உள்ளது. தனியார் பஸ்களும் இயங்குகின்றன. நாகமங்களாவில் இறங்கி, இங்கிருந்து வாடகை வாகனங்களில், கோவிலுக்கு செல்லலாம். தரிசன நேரம்: காலை 6:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: அபய ஆஞ்சநேயர் கோவில், ஹேமகிரி மலை, வெங்கடரமணர் கோவில், லட்சுமி வெங்கடேஸ்வரா கோவில்.






      Dinamalar
      Follow us