ADDED : டிச 27, 2025 06:21 AM

இன்றைய காலத்தில், ஊட்டச்சத்தான உணவை குழந்தைகளை சாப்பிட வைப்பது, அம்மாக்களுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். எண்ணெயில் பொறித்த, ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தின்பண்டங்களை, குழந்தைகள் அதிகம் விரும்புகின்றனர். இவர்களுக்கு பிடித்தமான சிற்றுண்டிகளில் பூரியும் ஒன்றாகும். பாலக்கீரை சேர்த்து பூரி செய்து தாருங்கள். ஊட்டச்சத்து கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 250 கிராம்
பச்சை மிளகாய் - 5
பாலக்கீரை - 3 கட்டு
சீரகம் - தேவையான அளவு
கொத்துமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - சுவைக்கு தேவையான அளவு
எண்ணெய் - பூரி பொறிக்க தேவையான அளவு
செய்முறை
பாலக்கீரையை நன்றாக ஆய்ந்து, உப்பு போட்டு நன்றாக கழுவவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் கீரையை போட்டு வேக வைக்கவும். ஆறிய பின் நீரை வடித்து விட்டு, அதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், கொத்துமல்லியை சேர்த்து, மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள கீரை விழுதை சேர்த்து, உப்பு போட்டு பூரி மாவு பதத்துக்கு பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் பூரிகளை போட்டு பொறித்து எடுத்தால், பாலக் பூரி தயார். குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பலாம். மாலை நேர டிபனுக்கும் ஏற்றது
- நமது நிருபர் - .

