/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை
/
பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை
ADDED : மே 02, 2025 05:35 AM

பெங்களூரு: வளிமண்டல சுழற்சி காரணமாக, பெங்களூரில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்தது. ஆட்டோ மீது மரம் விழுந்ததில், டிரைவர் உயிரிழந்தார்.
கர்நாடகாவில் கோடை காலம் துவங்குவதற்கு முன்பே, கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. வடமாவட்டங்களில் சூரியன் சுட்டெரிக்கும் நிலையில், தென்மாவட்டங்களிலும் குறிப்பாக பெங்களூரிலும் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல வெயில் அடித்தது. மாலை 5:00 மணிக்கு மேல் கருமேகங்கள் வானில் கூடின. சில்லென காற்று வீசியது. இரவு 7:15 மணிக்கு மழை துாறல் போட்டது. நேரம் செல்ல, செல்ல இடி, மின்னலுடன் கனமழை பெய்ய ஆரம்பித்தது.
பச்சை விளக்கு
சிவாஜிநகர், வசந்த்நகர், எம்.ஜி.ரோடு, ரிச்மென்ட் டவுன், மாநகராட்சி சதுக்கம், மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட், ராஜாஜிநகர், பசவேஸ்வரா நகர், நந்தினி லே - அவுட், கத்ரிகுப்பே, விஜயநகர், இந்திராநகர், பனசங்கரி, ஹலசூரு, வித்யாரண்யபுரா, கோரமங்களா, மடிவாளா, மல்லேஸ்வரம், சதாசிவநகர், சேஷாத்ரிபுரம், பானஸ்வாடி, கம்மனஹள்ளி, லிங்கராஜபுரம், ராமமூர்த்திநகர், ஜாலஹள்ளி, ஆர்.டி.நகர், பொம்மனஹள்ளி, மஹாலட்சுமி லே - அவுட், நைஸ் ரோடு, நாகரபாவி, பி.டி.எம்., லே - அவுட், டி.தாசரஹள்ளி, பீன்யா, எலஹங்கா, கோகிலு, ஹெப்பால், ஹொரமாவு, கே.ஆர்.புரம், வர்த்துார், ஒயிட்பீல்டு, குஞ்சூர், ஆர்.ஆர்.நகர், ஞானபாரதி, தாவரகெரே உட்பட நகர் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது.
நகரின் உள்ள சாலைகளில், மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. சாலை எங்கு உள்ளது; பள்ளம் எங்கு உள்ளது என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக இயக்கியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீர் மழையால் இரவு வேலை முடிந்து, பைக்கில் வீடு சென்றவர்கள் பாதிக்கப்பட்டனர். மழையில் நனைந்தபடி சிலர் சென்றனர்.
மெட்ரோ ரயில் நிலையம், ரயில்வே சுரங்க பாதையின் அடியில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுங்கி நின்றனர். மெஜஸ்டிக்கில் பஸ் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிக்னலில் பச்சை நிற விளக்கு எரிந்தால் கூட, வாகனங்களால் ஒரு அடி கூட முன்னோக்கி செல்ல முடியவில்லை. போக்குவரத்தை கட்டுப்படுத்த முடியாமல், போக்குவரத்து போலீசார் திணறினர்.
ஒரு கி.மீ., உயரம்
பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. பனசங்கரி கத்ரிகுப்பே பகுதியில், ராட்சத மரம் வேரோடு சாய்ந்து ஒரு ஆட்டோ, ஒரு கார் மீது விழுந்தது. இதில் ஆட்டோ பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் மகேஷ், 45 உடல்நசுங்கி பரிதாபமாக இறந்தார். காரும் பலத்த சேதம் அடைந்தது. ஆனால் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு போலீசார், மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்றனர். ஆட்டோ மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றி, மகேஷ் உடல் மீட்கப்பட்டது.
மழையால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்கள் இருளில் மூழ்கின. ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பின், மழையின் வேகம் குறைந்து துாறல் போட்டது. இரவு முழுவதும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.
திடீர் மழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறுகையில், ''குஜராத்தின் விதர்பாவில் இருந்து தமிழகத்தின் கன்னியாகுமரி வரை, கடலில் ஒரு கி.மீ., உயரம் வரை நிலவும், வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பெய்து உள்ளது. நாளையும் (இன்று) பெங்களூரில் மிதமான மழை பெய்யலாம். மைசூரு, குடகு, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது,'' என்றார்.