/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.17,780 கோடியில் ஹெப்பால் - சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகள்
/
ரூ.17,780 கோடியில் ஹெப்பால் - சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகள்
ரூ.17,780 கோடியில் ஹெப்பால் - சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகள்
ரூ.17,780 கோடியில் ஹெப்பால் - சில்க் போர்டு சுரங்கப்பாதை பணிகள்
ADDED : மார் 30, 2025 03:57 AM

'ஹெப்பால் - சில்க் போர்டு இடையில் 17,780 கோடி ரூபாய் செலவில், சுரங்கப் பாதை அமைக்கும் பணி இந்த ஆண்டு துவங்கும்' என, மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
முந்தைய பட்ஜெட்டில் மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும், போக்குவரத்து நேரத்தை குறைக்கவும், பிராண்ட் பெங்களூரு - சுமூக போக்குவரத்து பெங்களூரு திட்டத்தின் கீழ் 880 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருந்தது.
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சாலைகளின் இணைப்பை மேம்படுத்தவும் இலக்காக கொண்டு, ஆய்வு அறிக்கை அடிப்படையில், மெகா திட்டங்களை மேற்கொள்ள உள்ளோம்.
ஹெப்பாலில் இருந்து ஓசூர் ரோடு சில்க் போர்டு வரை 17,780 கோடி ரூபாய் செலவில், சுரங்கப்பாதை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. பணிகள் இந்த ஆண்டு துவங்கும்.
கே.ஆர்.புரத்தில் இருந்து மைசூரு ரோடு வரை 24,220 கோடி ரூபாயில், சுரங்கப் பாதை அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு சுரங்கப் பாதை திட்டங்களுக்கும் மொத்தம் 42,000 கோடி ரூபாய் தேவைப்படும். பொது - தனியார் பங்கீட்டில் மேற்கொள்ளப்படும். அரசு 19,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கும்.
சிக்னல் இல்லா பாதை
உள், வெளிவட்ட சாலைகளை நகருடன் விரைவாக இணைக்கும் வகையில் 110 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் கட்டப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரின், முக்கிய பகுதிகளில் சிக்னல் இல்லாத பாதைகள் அமைக்கப்படும். இதற்காக 13,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுமார் 40 கி.மீ., துார மெட்ரோ பாதையில் 9,000 கோடி ரூபாய் செலவில், ஈரடுக்கு மேம்பாலம் கட்டப்படும்.
சாக்கடை கால்வாயை ஒட்டி 300 கி.மீ., துாரத்திற்கு 3,000 கோடி ரூபாய் செலவில், சாலை அமைக்கும் திட்டம் உள்ளது. ஒயிட் டாப்பிங் எனும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு, பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. இதனால் நகரில் 6,000 கோடி ரூபாய் செலவில், ஒயிட் டாப்பிங் பணிகள் நடந்து வருகின்றன.
அரசு மற்றும் மாநகராட்சி 1,700 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ஏற்கனவே 200 கி.மீ., துார சாலை பணிகள் முடிந்துள்ளன. தற்போது 157 கி.மீ., துாரத்திற்கு ஒயிட் டாப்பிங் பணிகள் நடக்கின்றன.
விரிவான திட்ட அறிக்கை
பாதசாரிகள் நலனை கருத்தில் கொண்டு 1,000 கி.மீ., துாரத்திற்கு நடைபாதைகள் மேம்படுத்தப்படும். கே.ஆர்.புரத்தில் இருந்து பையப்பனஹள்ளி வழியாக லவ்ரி சந்திப்புக்கு செல்லும் வழியில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் உள்ளன. இந்த இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட 22.7 கி.மீ., துாரத்திற்கு 400 கோடி ரூபாய் செலவில், அரசு, மாநகராட்சி, மெட்ரோ நிர்வாகம் பங்களிப்பில் உலக தரம் வாய்ந்த சாலை அமைக்கப்படும்.
ரயில்வே துறையுடன் இணைந்து கெங்கேரி 1 வது மெயின் ரோட்டில் ரயில்வே மேம்பாலம், ரமோஹள்ளியில் சுரங்கபாதை அமைக்கப்படும். ஆர்.டி.நகர் போலீஸ் நிலையம் - டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கல்லுாரி; லிங்கராஜபுரம் மேம்பால சாலை, புலிகேசிநகரின் ஷியாம்புரா மெயின் ரோடு, யஷ்வந்தபுரின் கெஞ்சேனஹள்ளி மெயின் ரோடு, மஹாதேவபுராவில் முக்கிய சாலைகளை விரிவாக்கம் செய்ய, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.