தினசரி விற்பனை ரூ.1,000 தான்: சிரமத்தில் முதல்வர் மருந்தகங்கள்
தினசரி விற்பனை ரூ.1,000 தான்: சிரமத்தில் முதல்வர் மருந்தகங்கள்
ADDED : பிப் 01, 2026 01:14 AM

சென்னை: தமிழகம் முழுதும் துவக்கப்பட்ட, 1,000 முதல்வர் மருந்தகங்களில், பெரும்பாலானவற்றில் தினசரி விற்பனை, 1,000 ரூபாயை கூட தாண்டவில்லை. இதனால், மருந்தகங்களை நடத்த முடியாமல், கூட்டுறவு சங்கங்கள் சிரமத்தில் உள்ளன.
குறைந்த விலையில் தரமான மருந்து, மாத்திரை கிடைக்க, மாநிலம் முழுதும், 1,000 முதல்வர் மருந்தகங்களை, அரசு கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவக்கியது.
இதில், 538ஐ கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலைகளும் நடத்துகின்றன; மீதமுள்ள 462ஐ தனியார் நடத்துகின்றனர். அவற்றை கூட்டுறவு துறை நிர்வகிக்கிறது.
மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள், வெளிச்சந்தை விலையில், 75 சதவீதம் வரை குறைந்த விலைக்கு விற்கப்படுவதாக, கூட்டுறவு துறை தெரிவிக்கிறது. ஆனால், வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்துகள் கிடைப்பதில்லை.
இதனால், பெரும்பாலான மருந்தகங்களில் தினசரி விற்பனை, 1,000 ரூபாயை கூட தாண்டவில்லை என, புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, கூட்டுறவு பணியாளர்கள் கூறியதாவது:
மக்கள் அதிகம் கூடும் இடங்களில், இம்மருந்தகங்கள் திறக்கப்படவில்லை. அவசரகதியில் அரசின் காலியிடங்களில் துவக்கினர். வாடிக்கையாளர்கள் கேட்கும் மருந்துகளை அனுப்பாமல், அதிகாரிகள் தங்களின் இஷ்டத்திற்கு மருந்துகளை அனுப்புகின்றனர்.
இதனால், அவை விற்கப்படாமல் தேக்கமடைந்துள்ளன. கூட்டுறவு சங்கம் நடத்தும் ஒரு மருந்தகத்தில் பணிபுரியும் மருந்தாளுனருக்கு மாதம், 18,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. சங்க பணியாளருக்கு, 20,000 ரூபாய் - 24,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
மின் கட்டணத்துக்கு, 8,000 ரூபாய் செலவாகிறது. ஆனால், பெரும்பாலான மருந்தகங்களில், தினசரி, 1,000 ரூபாய் கூட மருந்துகள் விற்பனையாவதில்லை. இதே நிலை தான் தனியார் நடத்தும் முதல்வர் மருந்தகங்களிலும் நிலவுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

