/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு இளைஞர்களுக்கு அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்
/
பெங்களூரு இளைஞர்களுக்கு அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்
பெங்களூரு இளைஞர்களுக்கு அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்
பெங்களூரு இளைஞர்களுக்கு அதிகரிக்கும் உயர் ரத்த அழுத்தம்
ADDED : மே 20, 2025 12:18 AM
பெங்களூரு : உணவு முறை, வேலை பளு காரணமாக பெங்களூரில் உள்ள இளைஞர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
ஒரு காலத்தில் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களிடம் அரிதாக காணப்பட்ட உயர் ரத்த அழுத்தம், இப்போது பரவலாக காணப்படுகிறது. இன்றைய நகர வாழ்க்கை முறை, மன அழுத்தம், துாக்கமின்மை ஆகியவையால், பெங்களூரில் உள்ள பெரும்பாலான இளைஞர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு முழுதும் உள்ள மருத்துவமனைகளில், உயர் ரத்த அழுத்ததால் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் உயர்வு, 160/100ஐ தாண்டி 180/120ஐ கூட அடைகிறது. இதனால் பக்கவாதம், மூளையில் ரத்த போக்கு, இதய செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
அவ்வாறு பாதிப்பு ஏற்பட்டால், நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால், உறுப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். இதனை மருத்துவர்கள் 'கோல்டன் ஹவர்' என்று குறிப்பிடுகின்றனர்.
மருத்துவர்கள் கூறியதாவது:
கடந்த நான்கைந்து ஆண்டுகளாக 40 வயதுக்கு உட்பட்டோருக்கு ரத்த அழுத்தத்தால் பாதிப்போரின் எண்ணிக்கை 20 முதல் 25 சதவீதம் உயர்ந்து உள்ளது. தினமும் 10 பேராவது சிகிச்சை பெற வருகின்றனர்.
புகை பிடித்தல், மது அருந்துதல், போதை பொருள், பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளுதல், உடல் பருமன், உடற் பயிற்சி செய்யாதது போன்ற நவீன வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களே இதற்கு காரணம்.
உடல் ரீதியாக ஆரோக்கியமாக தோன்றும் இளைஞர்கள், அவசர சிகிச்சை பிரிவில் சேரும் வரை, அவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிவதில்லை.
இவ்வாறு அனுமதிக்கப்படுவோருக்கு முதலில் ஈ.சி.ஜி., சிறுநீரக செயல்பாடு அல்லது எக்கோ கார்டியோகிராம் பரிசோதனை செய்வோம். உறுப்பு செயலிழப்பு இருப்பது தெரிந்தால், உடனடியாக அவற்றுக்கு சிகிச்சை அளிக்க துவங்குவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.