2வது திருமணத்துக்கு துாண்டுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
2வது திருமணத்துக்கு துாண்டுவோர் மீது கிரிமினல் வழக்கு பதிய ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஆக 26, 2026 02:47 AM
பெங்களூரு: 'முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்ய, துாண்டி விட்டவர்கள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்யலாம்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
கலபுரகி மாவட்டம், யட்ராமி நகரில் ஆசிரியராக பணியாற்றுபவர் சுனில்குமார் போஜப்பா நாயிகொடி, 41. இவர் தன் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போதே, அவரை விவாகரத்து செய்யாமல், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையறிந்த முதல் மனைவி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசாரும் சுனில்குமார், இவரை இரண்டாம் திருமணத்துக்கு துாண்டிய உறவினர்கள் உட்பட, ஒன்பது பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி, இவர்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது நீதிபதிகள் சந்தேஷ் மற்றும் நதாப் முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.
நீதிபதிகள், 'முதல் மனைவி உயிரோடு இருக்கும் போதே, அவரை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்வது, சட்டப்படி குற்றமாகும். இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நபர் மட்டுமின்றி, இவரை துாண்டிவிட்ட நபர்களுக்கும், எந்த விதிவிலக்கும் கிடைக்காது.
'இவர்கள் மீது பதிவான கிரிமினல் வழக்கை ரத்து செய்ய முடியாது. இவர்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்' என உத்தரவிட்டனர்.
