/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தாபூரில் அமைதி கூட்டம் நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
/
சித்தாபூரில் அமைதி கூட்டம் நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சித்தாபூரில் அமைதி கூட்டம் நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
சித்தாபூரில் அமைதி கூட்டம் நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ADDED : அக் 25, 2025 05:17 AM

கலபுரகி: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் தலித் அமைப்பினர் ஒரே நாளில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டது தொடர்பாக, சித்தாபூரில் அமைதி கூட்டம் நடத்த அரசுக்கு, கலபுரகி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, கலபுரகி மாவட்டம், சித்தாபூரில் கடந்த 19ம் தேதி ஊர்வலம் நடத்த, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் அனுமதி கேட்டனர்.
அதே நாளில் ஊர்வலம் நடத்த தலித் அமைப்பும் அனுமதி கேட்டதால், இரு அமைப்புகளுக்கும் அனுமதி மறுத்து, கலபுரகி தாசில்தார் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து இரு அமைப்புகளும், கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளையில் மனுத்தாக்கல் செய்தனர்.
கடந்த 19ம் தேதி நடந்த விசாரணையின்போது, மனு மீதான விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. நேற்று நடந்த விசாரணையின்போது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சஷிகிரண் ஷெட்டி அறிக்கையை தாக்கல் செய்தார்.
அவர் முன்வைத்த வாதத்தில், ''ஒரே நாளில் இரு அமைப்புகளும் ஊர்வலம் நடத்தினால், மக்களுக்கு சிரமம் ஏற்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, கலபுரகி எஸ்.பி., கூறி உள்ளார். சில வாரங்களுக்கு பின், ஊர்வலம் நடத்துவது பொருத்தமானது என்று அறிக்கை கூறுகிறது,'' என்றார்.
நீதிபதி: அப்படியென்றால் நீங்கள் எப்போது முடிவு எடுப்பீர்கள்?
அட்வகேட் ஜெனரல்: விரைவில் அனைத்து அமைப்புகளுடன் சமாதான கூட்டம் நடத்த உள்ளோம். மனு மீது இரண்டு வாரங்களுக்கு பின் விசாரணை நடத்த வேண்டும்.
நீதிபதி: உங்கள் நிர்வாக திறமையை வெளிகாட்ட இதுவே சரியான நேரம். அனைவருக்கும் திருப்தி ஏற்படும் வகையில், பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுங்கள்.
அட்வகேட் ஜெனரல்: மனுதாரர்களை தவிர மேலும் 8 அமைப்புகள் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டாலும், நாங்கள் அனுமதி வழங்கவில்லை. இரண்டு வாரத்திற்குள் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
ஆர்.எஸ்.எஸ்., வக்கீல்: நவம்பர் 2ம் தேதி ஊர்வலம் நடத்தலாம் என்று முந்தைய வாதத்தில் அரசு தரப்பு தெரிவித்தது. தற்போது ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கும் வகையில் பேசுவது சரியல்ல.
நீதிபதி: வரும் 28ம் தேதி அமைதி கூட்டத்தை கூட்டுங்கள். 30ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுங்கள். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட முடிவை நாங்கள் கூறுகிறோம். இந்த பிரச்னையை விரைவில் தீர்ப்பது நல்லது. நாட்களை கடத்த வேண்டாம். மனு மீதான அடுத்த விசாரணை 30ம் தேதி நடக்கும்.

