/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாநில அரசு மீது உயர் நீதிமன்றம் விளாசல்! 11 பேர் பலி விவகாரத்தில் கடும் அதிருப்தி மனித உரிமை கமிஷனும் களமிறங்கியது
/
மாநில அரசு மீது உயர் நீதிமன்றம் விளாசல்! 11 பேர் பலி விவகாரத்தில் கடும் அதிருப்தி மனித உரிமை கமிஷனும் களமிறங்கியது
மாநில அரசு மீது உயர் நீதிமன்றம் விளாசல்! 11 பேர் பலி விவகாரத்தில் கடும் அதிருப்தி மனித உரிமை கமிஷனும் களமிறங்கியது
மாநில அரசு மீது உயர் நீதிமன்றம் விளாசல்! 11 பேர் பலி விவகாரத்தில் கடும் அதிருப்தி மனித உரிமை கமிஷனும் களமிறங்கியது
ADDED : ஜூன் 05, 2025 11:34 PM

பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது பற்றி, கர்நாடக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, விசாரணையை துவக்கி உள்ளது. 'விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தும்போது மக்கள் கூடுவர் என்று தெரியாதா; அரசு சார்பில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன?' என நீதிபதிகள், அரசை கடுமையாக விளாசினர். இச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை கமிஷனும் வழக்குப்பதிவு செய்து உள்ளது.
ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதன்முறையாக ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் பெங்களூரு விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில், நேற்று முன்தினம் பாராட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இஇ
விதான் சவுதா முன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடினர். சின்னசாமி மைதானத்தில் 34,600 பேர் மட்டுமே அமர இருக்கை உள்ள நிலையில், இரண்டு லட்சம் ரசிகர்கள் கூடினர்.
மைதானத்திற்கு மொத்தம் 21 நுழைவு வாசல்கள் உள்ளன. ஆனால், 12வது கேட் முன் ரசிகர்கள் திரண்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாமல், கேட்டை அங்கு பொறுப்பில் இருந்தவர்கள் திறந்துவிட்டனர். கட்டுப்பாடு இல்லாமல் ரசிகர்கள் உள்ளே நுழைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பெங்களூரு மாவட்ட கலெக்டர் ஜெகதீஷ் தலைமையில், மாஜிஸ்திரேட் விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.
இஇ
அரசின் அலட்சியத்தால் தான் இந்த உயிரிழப்புகள் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. 'இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்வதுடன், நீதி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவுக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கடிதமும் எழுதி வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து இந்த விவாகரம் குறித்து, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, நேற்று காலை விசாரணையை துவக்கியது. பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது நீதிபதிகள் கூறியது:
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசலில்
தொடர்ச்சி 4ம் பக்கம்
விளாசல்!
முதல் பக்கத் தொடர்ச்சி
சிக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியை பத்திரிகைகளில் படித்தோம். பத்திரிகைகள் செய்தி அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளோம்.
பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாட, ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வரும் என்று தெரியாதா?
ஒரே நேரத்தில் விதான் சவுதா, சின்னசாமி மைதானம் ஆகிய இரண்டு இடங்களில் நிகழ்ச்சி நடத்தியது ஏன்? மாநில அரசு சார்பில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ன?
இவ்வாறு சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுத்தனர்.
அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, 'அரசு எடுத்துள்ள நடவடிக்கை பற்றி மதியத்திற்குள் தகவல் அளிக்கிறேன்' என்றார். இதையடுத்து விசாரணை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்கு பின், விசாரணை துவங்கியது.
நீதிபதிகள் முன் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி கூறியதாவது:
பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடும் நோக்கில் விதான் சவுதா, சின்னசாமி மைதானத்தில நடந்த நிகழ்ச்சிக்காக 1,643 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் 789 பேர் சின்னசாமி மைதானத்தை சுற்றி பணியில் இருந்தனர்.
மைதானத்தின் 21 நுழைவுவாயில் கேட்டுகளும் திறந்திருந்தன. மைதானத்தில் 34,600 பேர் அமர மட்டுமே இருக்கைகள் உள்ளன. ஆர்.சி.பி., அணி நிர்வாகம் சார்பில் 33,000 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டது.
ஆனால் மைதானத்திற்குள் இரண்டரை லட்சம் பேர் வந்துள்ளனர். நுழைவுவாயில் கேட்டுகளை தள்ளி உள்ளனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஐந்து பெண்கள், ஆறு ஆண்கள் உயிரிழந்து உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'மைதானத்திற்குள் உயிரிழப்பு நடந்ததா?' என கேட்டனர். இதற்கு பதில் அளித்த சசிகிரண் ஷெட்டி, 'மைதானத்திற்குள் இல்லை, வெளியில் தான் உயிரிழப்பு நடந்தது' என்றார்.
நீதிபதிகள் கூறுகையில், 'ஒருவேளை கூட்ட நெரிசல் ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அரசிடம் இருந்து வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டதா; சம்பவம் நடந்தபோது மைதானத்தில் ஆம்புலன்ஸ் இல்லையா' என கேள்வி எழுப்பினர்.
'ஆம்புலன்ஸ்கள் இருந்தாலும், கூட்ட நெரிசலில் முன்நோக்கி செல்ல முடியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருந்தன' என்று சசிகிரண் ஷெட்டி பதிலளித்தார்.
மேலும் அவர் கூறியதாவது:
விதான் சவுதா முன், அரசு சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி, ஆர்.சி.பி., அணி நிர்வாகம் சார்பில் நடந்தது. நிகழ்ச்சி மேலாண்மை, பாதுகாப்பை பார்த்துக் கொள்வதாக அவர்கள் கூறியிருந்தனர்.
மைதானத்திற்கு பெங்களூரில் இருந்து மட்டுமின்றி மாநிலம் முழுதும் இருந்து மக்கள் அதிகமாக வந்த வண்ணம் இருந்தனர். இச்சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை ஏற்கனவே துவங்கப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசலில் 66 பேர் காயம் அடைந்துள்ளனர். விசாரணை செயல்முறையை வீடியோ எடுத்து உங்கள் முன்னிலையில் சமர்ப்பிப்போம். இச்சம்பவம் குறித்து மறைப்பது என்ற கேள்விக்கு இடம் இல்லை.
இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு உள்ளது. வரும் நாட்களில் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இதுபோன்று சம்பவம் ஏற்படாமல் தடுக்க அரசு வழிகாட்டுதல் வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நீதிமன்றத்தில் இருந்த மூத்த வக்கீல் அருண் ஷ்யாம் உள்ளிட்ட சில வக்கீல்கள், 'சம்பவம் நடந்தபோது ஆம்புலன்ஸ்கள் எங்கு நிறுத்தப்பட்டு இருந்தன? கூட்டத்தை கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரி யார்? இந்நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தது யார்? அது மாநில அரசாக இருந்தாலும் சரி; கிரிக்கெட் சங்கமாக இருந்தாலும் சரி மக்களுக்கு பதில் தேவை. இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என நீதிபதிகளிடம் வலியுறுத்தினர்.
வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'இந்த துயர சம்பவத்திற்கான காரணம்; எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் எவ்வாறு தடுப்பது என்பதை அரசு கண்டறிய வேண்டும்' என்று கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்த விசாரணையை 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையில் 11 பேர் இறந்த விவகாரத்தில் தேசிய மனித உரிமை ஆணையமும் களம் இறங்கி உள்ளது. சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள், பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஏழு நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தாவுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.