/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டவிரோத மணல் கொள்ளையை அரசு தடுக்கவில்லை உயர் நீதிமன்றம் அதிருப்தி
/
சட்டவிரோத மணல் கொள்ளையை அரசு தடுக்கவில்லை உயர் நீதிமன்றம் அதிருப்தி
சட்டவிரோத மணல் கொள்ளையை அரசு தடுக்கவில்லை உயர் நீதிமன்றம் அதிருப்தி
சட்டவிரோத மணல் கொள்ளையை அரசு தடுக்கவில்லை உயர் நீதிமன்றம் அதிருப்தி
ADDED : பிப் 01, 2026 05:09 AM

பெங்களூரு: 'அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள செல்வாக்கு மிக்க நபர்கள், சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுகின்றனர்' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், சட்டசபையில் பேசியதை, கர்நாடக உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. இதுகுறித்து, தாமாக முன்வந்து பொதுநல வழக்கு பதிவு செய்துள்ளது.
கடந்த, 27ம் தேதியன்று, சட்டசபையில் பேசிய உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், 'சட்டவிரோத மணல் கொள்ளை, மாநிலத்தில் பெரிய அளவில் நடக்கிறது. இந்த விஷயத்தில் யாருடைய பெயரையும், நான் குறிப்பிடவில்லை. யாரையும் குற்றம்சாட்டவில்லை.
மாநிலத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிலும் உள்ள செல்வாக்கு மிக்க நபர்களுக்கு, சட்டவிரோத மணல் கடத்தலில் தொடர்பு உள்ளது. இதுகுறித்து ஆலோசனை நடத்த கூட்டம் நடத்தப்படும்' என்றார்.
அமைச்சர் கூறியது, மறுநாள் ஊடகங்களில் வெளியானது. இதைக்கவனித்த கர்நாடக உயர் நீதிமன்றம், தானாக முன்வந்து பொது நல வழக்கு பதிவு செய்துள்ளது. நேற்று முன் தினம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி, மூன்று வாரங்களில் விளக்கம் அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
மணல் கொள்ளை குறித்து, சட்டசபையில் அமைச்சர் பேசியுள்ளார். இது, ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. கிருஷ்ணா நீர்ப்பாசன பகுதியில், இரவு நேரத்தில் நிரந்தரமாக மணல் கொள்ளை நடக்கிறது.
இதிலிருந்து எழும் துாசியால், அப்பகுதியில் விவசாயிகளின் பயிர்களும் பாழாகின்றன என, விவசாயிகள் வருத்தம் அடைவது குறித்தும், ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மணல் தொழில் நடக்கும் பகுதிகளில், வாகன நடமாட்டத்தை கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்கள், செக் போஸ்ட்கள் இல்லாத காரணத்தால், சட்டவிரோத மணல் கொள்ளை அதிகரிக்கிறது. மணலை கடத்தும் வாகனங்களால் விபத்துக்களும் நடக்கின்றன.
ராய்ச்சூர் மாவட்டத்தில் பெண் எம்.எல்.ஏ., ஒருவர், தன் தொகுதியில் நடக்கும் சட்டவிரோத மணல் கடத்தலுக்கு எதிராக குரல் எழுப்பியதால் அவருக்கு மணல் மாபியாக்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
முறைப்படி டெண்டர் விடுத்து, கட்டுமானத்திற்கு தேவையான மணல் அள்ளினால், அரசு கருவூலத்துக்கு பணம் வரும். மணல் மாபியாக்களை தடுக்க முடியவில்லை என, மாநில உள்துறை அமைச்சரே தனது இயலாமை தெரிவித்துள்ளார் என்றால், மாநிலத்தில் நடக்கும் சட்டவிரோத மணல் கொள்ளை தடுக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இது, மிகவும் கடுமையான பிரச்னை. மத்திய விசாரணை அமைப்பு அல்லது சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

