பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி அதிகரித்தது எப்படி? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி
பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லாத நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி அதிகரித்தது எப்படி? பா.ஜ., - எம்.எல்.சி., கேள்வி
ADDED : ஏப் 26, 2026 12:56 AM

மைசூரு: ''எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில், 94.1 சதவீதம் தேர்ச்சி வந்திருப்பது சந்தேகம் அளிக்கிறது. தேர்வு நடைமுறை மற்றும் விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி நடந்துள்ளது,'' என, பா.ஜ., - எம்.எல்.சி., விஸ்வநாத் குற்றம் சாட்டினார்.
மைசூரில் அவர் அளித்த பேட்டி:
பெரும்பாலான அரசு பள்ளிகளில், ஆசிரியர்களே இல்லை. அப்படி இருந்தும், 94 சதவீதம் தேர்ச்சி சதவீதம் என்பது எப்படி வந்தது. கடந்தாண்டு தேர்ச்சி அளவு, 80.1 சதவீதமாக இருந்தது. ஒரே ஆண்டில் பத்து சதவீதத்திற்கு மேல் அதிகரித்தது எப்படி.
தேர்வு நடைமுறை மற்றும் விடைத்தாள் திருத்துவதில் முறைகேடு நடந்துள்ளதாக, சந்தேகம் எழுந்துள்ளது. சில சோம்பேறி ஆசிரியர்கள் மட்டுமே, இந்த தேர்ச்சியை வரவேற்றுள்ளனர். கல்வியின் தரத்தை உயர்த்த அரசு முக்கியத்துவம் அளிக்கவில்லை.
அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைக்கிறது. வரும் நாட்களில் என்ன கதியாகும். பி.யு.சி., வரை கல்வியை தொடர்வோர் எண்ணிக்கை குறையும். இது, மிகவும் அபாயமானது.
அனைவருக்கும், 20க்கு 20 உள் மதிப்பீடு மதிப்பெண் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை சேர்த்தால், தேர்ச்சி பெற, 13 மதிப்பெண் மட்டுமே தேவை. அந்த மதிப்பெண் பெற காப்பியடிக்க வைத்துள்ளனர்.
முதல்வர் சித்தராமையா அரசு, கல்வி நடைமுறையை பாழாக்குகிறது. இதையே பெரிய சாதனை என்று பெருமை பேசுகிறது.
தாய்மொழி கன்னடத்தில், பலரும் தோல்வி அடைந்தது ஏன். இது எந்த விதமான சாதனை. மாணவர்களை பிடிவாதத்துடன் தேர்ச்சி பெற வைத்துள்ளனர்.
சிறார்களுக்கு தரமான கல்வி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமனம், பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்வதில் இந்த பிடிவாதம் இருந்திருக்க வேண்டும்.
பெருமளவில் ஆசிரியர் பணியிடங்களை காலியாக வைத்து கொண்டு, இந்த அளவுக்கு தேர்ச்சியை கொண்டு வந்தது எப்படி. சிறார்களின் படிக்கும் ஆர்வத்தை அரசு பறிக்கிறது. இந்த மனநிலை மாற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
