மழை நேரத்தில் இடி, மின்னல் அபாயத்திலிருந்து தப்பிப்பது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
மழை நேரத்தில் இடி, மின்னல் அபாயத்திலிருந்து தப்பிப்பது எப்படி? வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ADDED : மே 03, 2026 02:00 AM
பெங்களூரு: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், கோடை மழை பெய்கிறது. இடி, மின்னலும் அதிகமாக உள்ளது. இந்த இடி மின்னல் அபாயத்தில் இருந்து தப்பிக்க, அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநில அரசு வெளியிட்ட சுற்றறிக்கை:
மாநிலத்தில் கோடை மழை பெய்கிறது. தென்மேற்கு பருவ மழைக்காலம் நெருங்குகிறது. இடி, மின்னலுடன் மழை பெய்கிறது. இதிலிருந்து தற்காத்து கொள்ள, அரசு பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்றுங்கள்.
மழை பெய்யும் போது, எந்த காரணத்தை கொண்டும், வீட்டில் இருந்து வெளியே வராதீர்கள். ஒருவேளை மழை பெய்யும் போது வெளியே இருந்தால் உடனடியாக அருகேயுள்ள உள்ள கட்டடம் அல்லது குடியிருப்பு இடங்களில் அடைக்கலம் பெறுவது நல்லது.
ஒதுங்கி நிற்க சரியான இடம் ஏதும் இல்லை என்றால், இரண்டு கால்களை சேர்த்து மண்டியிட்டு அமர்ந்து, தலையை குனிந்து காதுகளை மூடிக்கொள்ள வேண்டும்.
மழை பெய்யும் போது, பலர் மரத்தின் கீழே நிற்கின்றனர். இது, மிகவும் அபாயமானது. இடி இடிக்கும் போது, மரங்களில் மின்சாரம் பாயும். எனவே மரத்தடியில் நிற்கவே கூடாது. மேற்கூரை உள்ள இடங்களில் ஒதுங்குங்கள். கனமழை பெய்யும் போது எலக்ட்ரிக் சாதனங்களை பயன்படுத்தாதீர்கள்.
மழை பெய்யும் போது, இடி நேரடியாக மின் கம்பிகளில் மோதும். இதிலிருந்து அதிகமான வோல்டேஜ் வீட்டுக்குள் பாயும். இதன் விளைவாக, 'டிவி' பிரிஜ், கம்ப்யூட்டர்களை எரித்துவிடும். மொபைல் போன்களையும் சேதமாக்கும்.
சிறார்கள் மழை பெய்யும் போது, வெளிவளாகத்தில் நனைவதை மிகவும் விரும்புவர். அப்போது மின்னல் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே சிறார்களை வெளியே விளையாட அனுமதிக்காதீர்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும், வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் ஆலோசனைகளை பின்பற்றுங்கள். அதன்படி உங்களின் தினசரியை திட்டமிடுங்கள்.
இதனால் மழையால் தொந்தரவுக்கு ஆளாவதை தவிர்க்கலாம். மழை பெய்யும் போது, ஆறு, ஏரிகள், கால்வாய்கள் போன்ற நீர் நிலைகளின் அருகே செல்லக்கூடாது.
மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மொபைல் டவர், காற்றாலை, ரயில் தண்டவாளங்கள் அருகிலும் செல்வதை தவிர்க்க வேண்டும்.
இடி, மின்னலுடன், மழை பெய்யும் போது விவசாய பணிகளில் ஈடுபடுவது அபாயமானது. ஆடு, மாடுகளை மழையில் அழைத்து செல்லாதீர்கள். தோட்டத்துக்கும் செல்ல கூடாது.
உலோக தகடு உள்ள வீடுகள் பாதுகாப்பானது அல்ல. எனவே ஜன்னல் கதவுகளை மூடுவது நல்லது.
இடி, மின்னல் இருக்கும் போது, கட்டடத்தின் குழாய், உலோக குழாய்களின் மூலம், மின்சாரம் பாயும் அபாயம் அதிகம். இத்தகைய நேரத்தில் குளிப்பதை தவிருங்கள். வீட்டில் உள்ள கம்ப்யூட்டர், லேப்டாப், வீடியோ கேம், மொபைல் போன், வாஷிங் மெஷின், மின் அடுப்பு உட்பட, மற்ற மின்சார உபகரணங்களின் இணைப்பை துண்டித்து விடுங்கள்.
இடியால் தாக்கப்பட்ட நபரால், மற்றவருக்கு எந்த அபாயமும் ஏற்படாது. எனவே அந்நபரை காப்பாற்ற, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். 112 அல்லது 108 உதவி எண்ணில் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
