/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
/
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது
ADDED : ஜன 23, 2026 06:04 AM
பெலகாவி: மனைவியை கொடூரமாக தாக்கி, கொலை செய்து விட்டு மாரடைப்பால் இறந்ததாக கதை கட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.
பெலகாவி மாவட்டம், கானாபுரா தாலுகாவின், காபோலி கிராமத்தில் வசிப்பவர் அவிநாஷ், 40. இவரது மனைவி கிரணா, 35. தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என, இரண்டு குழந்தைகள் உள்ளனர். தம்பதி வீட்டருகில் கடை நடத்துகின்றனர்.
சில மாதங்களாக, மனைவி நடத்தையில் அவிநாஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது. கடைக்கு பொருட்கள் வாங்க வருவோரிடம், மனைவி பேசினாலும் சந்தேகப்பட்டு, தகராறு செய்தார். இரண்டு நாட்களுக்கு முன், இதே காரணமாக தம்பதிக்கிடையே சண்டை நடந்தது. மனைவியை தாக்கினார். அப்போது அங்கு வந்த குடும்பத்து பெரியவர்கள், தம்பதியை சமாதானம் செய்தனர்.
அவர்கள் சென்ற பின், மனைவியை கொடூரமாக தாக்கியதில், அவர் உயிரிழந்தார். மருத்துவமனைக்கு செல்வதாக மனைவியின் உடலை கொண்டு சென்ற அவிநாஷ், சிறிது நேரத்துக்கு பின் மீண்டும் ஊருக்கு திரும்பி, மனைவி மாரடைப்பால் இறந்ததாக கூறி, ஊராரிடம், உறவினரிடம் கதை கட்டினார்.
நேற்று முன்தினம், இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். பெண்கள், கிரணாவின் உடலை குளிப்பாட்ட உடைகளை அகற்றிய போது, உடல் முழுதும் காயங்கள், தழும்புகள் இருப்பதை கண்டனர்.
மனைவியை அடித்து கொன்றது தெரிந்து, உடனடியாக நந்தகடா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கிரணாவின் உடலைமீட்டனர்.
அவிநாஷை கைது செய்தனர். பிள்ளைகளிடம் விசாரித்த போது, அவிநாஷின் கொடூரம் தெரிந்தது. பல முறை பிள்ளைகளின் கண் முன்னே, மனைவியை நிர்வாணமாக்கி, கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார். 'கரன்ட் ஷாக்' கொடுத்து சித்ரவதை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது. மனைவியை கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார்.

