மனைவியை கொன்ற கணவர் கைது 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்
மனைவியை கொன்ற கணவர் கைது 'ஆன்லைன்' சூதாட்டத்தால் விபரீதம்
ADDED : ஜூன் 15, 2026 10:24 PM
மஹாதேவபுரா: 'ஆன்லைன்' சூதாட்டத்துக்கு அடிமையான கணவர், தன்னை விட்டு பிரிந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து, தானும் தற்கொலைக்கு முயற்சித்தார்.
பெங்களூரின் மஹாதேவபுராவில் வசிப்பவர் பிரதீப், 36. இவரது மனைவி மஞ்சுளா, 32. தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மஹாதேவபுரா போலீஸ் நிலையத்தில், ஊர்க்காவல் படை ஊழியராக மஞ்சுளா பணியாற்றி வந்தார்.
பிரதீப், ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாக இருந்தார். இதற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கினார். சரியாக பணிக்கும் செல்வதில்லை. இதனால் குடும்பத்தினர், பொருளாதார நெருக்கடியில் சிக்கினர்.
இதற்கிடையே ஊர்க்காவல் படையில் பணியாற்றும் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து, அவருடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மனைவியை திட்டியும், தாக்கியும் கொடுமைப்படுத்தினார். இதை தாங்க முடியாமல், கணவரை விட்டு பிரிந்த மஞ்சுளா, தன் குழந்தைகளுடன் புஷ்பாஞ்சலி திரையரங்கு அருகில், தனியே வசிக்க துவங்கினார். இதனால் கணவர் கோபம் அடைந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம், இரவு 9:00 மணியளவில் மனைவியின் வீட்டுக்கு வந்த பிரதீப், மன்னிப்பு கேட்பது போன்று நடித்தார். 'நான் செய்தது தவறுதான். உன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறேன். வீட்டுக்கு வா' என, அழைத்தார். ஆனால் மஞ்சுளா வர மறுத்தார்.
இதனால் கோபமடைந்த கணவர், ஜெர்கினில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிள்ளைகளின் கண்ணெதிரில் மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
அதன்பின் வீடியோ பதிவு செய்த பிரதீப், 'ஆன்லைன் சூதாட்டத்தால், என் மனைவி, குழந்தைகள் வீதிக்கு வந்தனர். என்னை விட்டு பிரிந்தனர். வீட்டுக்கு வரும்படி அழைத்தால், மனைவி மறுக்கிறார். என் மாமியார் மற்றும் மைத்துனியால், என் மனைவி பாழானார். நானும் சாகிறேன். என் மனைவியும் சாகிறாள்' என கூறிவிட்டு, தன் கையை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
தகவலறிந்து அங்கு வந்த மஹாதேவபுரா போலீசார், பிரதீப்பை கைது செய்தனர்.
