லாட்ஜ் அறையில் மனைவியை கொன்று கணவர் தப்பியோட்டம்
லாட்ஜ் அறையில் மனைவியை கொன்று கணவர் தப்பியோட்டம்
ADDED : செப் 17, 2026 11:12 PM
தொட்டபல்லாபூர்: காதலித்து திருமணம் செய்த மனைவியை, லாட்ஜ் அறையில் கொலை செய்து தப்பிய நபரை, போலீசார் தேடுகின்றனர்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் தாலுகாவின், முதுகெரே கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 26. இவரும் நகரகெரே கிராமத்தின் வித்யா, 23, என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், காந்தி நகரில் வாடகை வீட்டில் வசித்தனர்.
ராஜானுகுன்டேவில் உள்ள நிதி நிறுவனத்தில், ஆனந்த் பணியாற்றுகிறார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வித்யா பணியாற்றினார்.
கடந்த ஆறு மாதங்களாக, குடும்ப பிரச்னையால் தம்பதிக்கிடையே தினமும் சண்டை நடந்ததால், வெறுப்படைந்த வித்யா, இரண்டு மாதங்களுக்கு முன், கணவரை விட்டு பிரிந்து பெங்களூரில் வசிக்க துவங்கினார். மனைவி காணாமல் போனதாக, தொட்டபல்லாபூர் மகளிர் போலீஸ் நிலையத்தில், ஆனந்த் புகார் அளித்தார்.
போலீசாரும், 20 நாட்களுக்கு முன், வித்யாவை கண்டுபிடித்து, போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, அறிவுரை கூறினர். கணவருடன் அனுப்பி வைத்தனர்.
நேற்று முன்தினம், தொட்டபல்லாபூரில் உள்ள லாட்ஜுக்கு மனைவியை ஆனந்த் அழைத்து சென்றார்.
நள்ளிரவு ஐ.டி., கார்டின் டேக் கயிரை பயன்படுத்தி, மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, அவரது மொபைல் போனை எடுத்து கொண்டு, லாட்ஜில் இருந்து தப்பியோடி விட்டார்.
லாட்ஜ் அறையை நேற்று காலை காலி செய்ய வேண்டியிருந்ததால், லாட்ஜ் ஊழியர் ஒருவர், ஆனந்துக்கு போன் செய்தார். அவரது போன் சுவிட்ச் - ஆப் செய்யப்பட்டிருந்தது.
அந்த ஊழியர் அறைக்கு சென்று பார்த்த போது, வித்யா கொலையாகி கிடந்தது தெரிந்தது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த தொட்டபல்லாபூர் போலீசார், வித்யாவின் உடலை மீட்டு, கொலையாளியை தேடி வருகின்றனர்.
