ADDED : மே 18, 2026 11:20 PM

மாதநாயக்கனஹள்ளி: குண்டாக இருப்பதாக கூறி, கணவர் துன்புறுத்தியதால் மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கலபுரகியை சேர்ந்த தம்பதி லட்சுமணன், 35; சிவலீலா, 31. இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்தனர். திருமணத்திற்கு பின், பெங்களூரு ரூரல் ஹெக்கடேதேவனபுராவில் வசித்தனர். தம்பதிக்கு குழந்தை இல்லை.
திருமணம் முடிந்த சில மாதங்களில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சுமணன் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார். 'நீ குண்டாக இருக்கிறாய்; உனக்கு குழந்தை பிறக்காது' என்று கூறி மனரீதியாக துன்புறுத்தி வந்து உள்ளார்.
அத்துடன் வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த சிவலீலா நேற்று முன்தினம் இரவு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவலீலா பெற்றோர் அளித்த புகாரில், மாதநாயக்கனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
