ADDED : ஏப் 16, 2026 04:04 AM

மைசூரு: ''எனது தந்தை சித்தராமையா முதல்வராக இருக்கும் வரை அமைச்சர் பதவி கேட்க மாட்டேன்,'' என அவரது மகனும், எம்.எல்.சி.,யுமான யதீந்திரா புதிய குண்டு போட்டு உள்ளார்.
கர்நாடகா காங்கிரசில் முதல்வர் பதவி விவகாரம், அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கும் எம்.எல்.ஏ.,க்கள் என பல பிரச்னைகள் இருக்கின்றன. கட்சிக்குள் நடக்கும் சண்டைகள் குறித்து தினமும் ஒரு செய்தியாவது வெளியாகிறது. ஆட்சி நீடிக்குமா என்பதே சந்தேகமாகி விட்டது.
இந்நிலையில், தன் பங்கிற்கு ஏதாவது பிரச்னையை துாண்டிவிடும் வகையில் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா நேற்று அளித்த பேட்டி:
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. எம்.எல்.ஏ.,க்கள் அமைச்சர் பதவி கேட்பது சாதாரணமானதே. நான் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவன் கிடையாது. இருப்பினும், என் தந்தை முதல்வராக இருக்கும் வரை, நான் அமைச்சர் பதவி கேட்க மாட்டேன். ஒருவேளை, என் தந்தை முதல்வராக இல்லையென்றால் நான் அமைச்சர் பதவி கேட்க வாய்ப்புண்டு.
அரசு ஒப்பந்ததாரர்கள் கமிஷன், அரசு அதிகாரிகள் இடமாற்ற முறைகேடு குறித்து பா.ஜ.,வினர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவர்களால் முடிந்தால் ஆதாரத்தை சமர்ப்பிக்கவும். ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைப்பது எளிது. இது, மக்களிடம் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற காரியங்களை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன். என் தந்தையை இழிவுபடுத்துவதற்காகவே எதிர்க்கட்சிகள் என்னை குறிவைக்கின்றனர்.
வாரிசு அரசியல் என்பதை நாங்கள் செய்யவில்லை. எனது சகோதரர் மரணத்தினாலே நான் அரசியலுக்கு வந்தேன். இதற்கு பெயர் வாரிசு அரசியல் கிடையாது. மத்திய அரசின் அழுத்தத்தின் பெயரிலே அமலாக்கத்துறை செயல்படுகிறது. முடா வழக்கில் அமலாக்கத்துறை வழக்கு தொடருவதற்கு அனுமதி கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
