தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வேண்டிய வரம் அளிக்கும் இக்கேரி அகோரேஸ்வரர்

 வேண்டிய வரம் அளிக்கும் இக்கேரி அகோரேஸ்வரர்

 வேண்டிய வரம் அளிக்கும் இக்கேரி அகோரேஸ்வரர்


ADDED : பிப் 17, 2026 05:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு சுற்றுலா தலங்களை காண்கின்றனர். அத்துடன், இந்த மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால், இக்கேரி அகோரேஸ்வரர் கோவிலை பற்றி பலருக்கும் தெரிவதில்லை. கேட்ட வரங்களை அள்ளித்தரும் சிவபெருமான் இங்கு அருள் பாலிக்கிறார்.

இக்கேரி என்பது, ஷிவமொக்கா மாவட்டம், சாகரா தாலுகாவில் உள்ள சிறிய கிராமம். சிறிய கிராமம் என்றாலும், இது வரலாற்று பிரசித்தி பெற்றது. 16 மற்றும் 17ம் நுாற்றாண்டில் கவுதியை ஆட்சி செய்த மன்னர்கள், இக்கேரியை தங்களின் தலைநகராக வைத்திருந்தனர்.

முதலில் விஜயநகர மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கவுதி சமஸ்தானம், அதன்பின் வீரபத்ர நாயகரின் ஆட்சியில் விடுதலை பெற்று சுதந்திரமான சமஸ்தானமானது. அப்போது, இக்கேரியை அன்றைய மன்னர், தலைநகராக மாற்றியதாக வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சில காலத்துக்கு பின், கவுதி மன்னர், தன் தலைநகரை பிதநுாருக்கு மாற்றினாராம். இக்கேரி இன்றைக்கும் தன் பெருமையை தக்க வைத்துள்ளது. இக்கேரியில் பிரம்மாண்டமான கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையின் இடிபாடுகளை தற்போதும் காணலாம்.

ஆனால், இங்குள்ள அகோரேஸ்வரர் கோவில், இன்றைக்கும் கவுதி மன்னர்களின் ஆட்சிக்கு சான்றாக உள்ளது.

பெரிய கம்பங்கள், அழகான சிற்பங்கள் உள்ள கோவில் இது. 16ம் நுாற்றாண்டில் தொட்ட சங்கண்ண நாயகரின் ஆட்சியில், அகோரேஸ்வரர் கோவிலை கட்டினாராம். சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில். லிங்க வடிவில் சிவன் தரிசனம் தருகிறார். அகிலாண்டேஸ்வரியும் இங்கு குடி கொண்டுள்ளார்.

கர்ப்பக்கிரகம், சிறிதும், பெரிதுமாக கலை நயமிக்க மண்டபங்கள், அழகான கோபுரம் எல்லாம் பக்தர்களை ஈர்க்கின்றன.

கோவிலின் நுழை வாசலில், இரண்டு யானை சிற்பங்கள் தென்படுகின்றன. அன்னப்பறவை, வாத்திய கலைஞர்கள், நடனமாடும் கன்னியர்கள், ஐராவதம் மீது அமர்ந்துள்ள இந்திரன், யானை, சிங்கம், நாகர் உட்பட, பல சிற்பங்களை இங்கு காணலாம். சிவன் இருந்தால், அங்கு கட்டாயம் நந்தியும் இருப்பார்.

அகோரேஸ்வரர் கோவிலிலும், கல்லால் செதுக்கப்பட்ட நந்தி சிலை உள்ளது. சிறு குழந்தைகள், நந்தியின் கால்களின் இடுக்கில் நுழைந்து வந்தால், அவர்களுக்கு சிவனின் ஆசி கிடைக்கும். அவர்களின் எதிர்காலம் வளமாக இருக்கும் என்பது ஐதீகம்.

பெரியவர்களும் நுழைந்து வந்தால், விருப்பங்கள் நிறைவேறும். இதனை, 'ராஜ நந்தி' என்றும் அழைக்கின்றனர். நந்தி சிலை அமைக்கப்பட்டதன் பின்னணியில், ஒரு புராதன கதை உள்ளது. முன்னொரு காலத்தில், காளை மாடு ஒன்று கொள்ளையர்களிடம் சிக்கியது. அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்த காளை, அகோரேஸ்வரர் முன்னால் அமர்ந்து, என்னை காப்பாற்று என, வேண்டியது.

அப்போது, சிவபெருமான் காளை மாட்டை கல்லாக மாற்றி, தன்னிடமே வைத்து கொண்டதாக ஐதீகம்.

கோவிலின் வெளிப்பகுதி, பசுமை சூழ்ந்துள்ளது. எந்த விதமான சத்தமும் இல்லாமல், நிசப்தமான சூழலில் கோவில் அமைந்துள்ளது. இங்கு வந்து அகோரேஸ்வரரை தரிசித்தால், சஞ்சலமடைந்து தவிக்கும் மனம் அமைதி பெறும்.

வாழ்க்கையில் திருப்பங்கள் ஏற்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. கோவிலை பற்றி தெரிந்தவர்கள், இங்கு வந்து தரிசனம் செய்கின்றனர்.

இக்கோவில் பல சிறப்புகளை கொண்டுள்ளது. ஷிவமொக்காவுக்கு வருவோர், அகோரேஸ்வரரை தரிசிக்க மறக்காதீர்கள்.

தரிசன நேரம் பெங்களூரில் இருந்து, 382 கி.மீ., மைசூரில் இருந்து 321 கி.மீ., ஷிவமொக்காவில் இருந்து, 82 கி.மீ., தொலைவில் சாகரா உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், சாகராவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சாகராவில் இருந்து ஐந்தாறு கி.மீ., தொலைவில், அகோரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தரிசன நேரம் காலை 8:00 முதல், மாலை 6:00 மணி வரை. சிறப்பு நாட்களில் இரவு 9:00 மணி வரை, அகோரேஸ்வரரை தரிசிக்க அனுமதி உண்டு. அருகில் உள்ள தலங்கள் முருடேஸ்வரா கோவில், கவுதி கோவில், ஜோக் நீர் வீழ்ச்சி, சக்ரேபைலு யானைகள் முகாம், கொடச்சாத்ரி மலை.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us