மே 1 முதல் ஷிவமொகாவிலிருந்து இண்டிகோ விமான சேவை நிறுத்தம்
மே 1 முதல் ஷிவமொகாவிலிருந்து இண்டிகோ விமான சேவை நிறுத்தம்
ADDED : மார் 15, 2026 05:30 AM
ஷிவமொக்கா: மே, 1ம் தேதி முதல், ஷிவமொகாவில் இருந்து விமானங்களை இயக்குவதை, இண்டிகோ விமான நிறுவனம் நிறுத்தியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனம், மும்பை, சென்னை, டில்லி, ஆமதாபாத், ஹைதராபாத், பஞ்சாப், கோவா என நாட்டின், 131 வழித்தடங்களில் விமானங்களை இயக்கி வருகிறது.
கடந்தாண்டு ஆமதாபாத் விமான விபத்துக்கு பின், ஏ.ஜி.சி.ஏ., எனும், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதில், விமானிகளின் வேலை நேரம், விமான பராமரிப்பு தொடர்பான புதிய விதிகள் காரணமாக, இண்டிகோ நிறுவனம் விமானிகள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது.
இந்த தொழில்நுட்ப காரணத்தால், சிறிய நகரங்களுக்கு வழங்கி வந்த ஏ.டி.ஆர்., வகை விமானங்களின் சேவையை குறைக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஷிவமொகா விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட ஏ.டி.ஆர்., விமானங்களை ஏப்ரல், 30 ம் தேதியுடன் நிறுத்துவதாக அறிவித்து உள்ளது.
இதன் மூலம், மே 1 ம் தேதி முதல் ஷிவமொகாவில் இருந்து இண்டிகோ விமான நிறுவனங்களின் விமானம் இயக்கப்படாது.
