வீட்டிலிருந்து உணவு கொண்டு வாங்க ஊழியர்களுக்கு 'இன்போசிஸ்' உத்தரவு
வீட்டிலிருந்து உணவு கொண்டு வாங்க ஊழியர்களுக்கு 'இன்போசிஸ்' உத்தரவு
ADDED : மார் 14, 2026 06:42 AM
பெங்களூரு: காஸ் தட்டுப்பாடு நிலவுவதால், தங்களின் ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே உணவு கொண்டு வர வேண்டும் என, இன்போசிஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தற்போது மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. வர்த்தக சிலிண்டர்கள் கிடைக்காததால், பல ஹோட்டல்கள் மூடப்பட்டு உள்ளன. சில ஹோட்டல்கள், பி.ஜி., விடுதிகள் விறகு அடுப்புகளை பயன்படுத்தி, சமையல் செய்து வருகின்றன.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்தில் பிரதான இடம் பிடித்துள்ள, பெங்களூரு இன்போசிஸ் நிறுவனத்தில், நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக, நிறுவன வளாகத்தில் உணவகம் இயங்கி வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இங்கு சாப்பிடுகின்றனர். தற்போது காஸ் தட்டுப்பாடு காரணமாக, இந்த உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இன்போசிஸ் நிறுவனம், தங்களது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியிருப்பதாவது:
காஸ் தட்டுப்பாடு காரணமாக, நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் உணவகத்தில், குறிப்பிட்ட சில உணவுகள் மட்டுமே விற்கப்படும். இது, அனைத்து ஊழியர்களுக்கும் போதாது.
எனவே, ஊழியர்கள் வீட்டில் இருந்தே உணவு கொண்டு வர வேண்டும். உணவு எடுத்து வர முடியாதவர்களுக்கு, நிறுவனம் சார்பில் வெளியே கேட்டரிங் மூலம் உணவு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தயாரிக்கப்பட்ட உணவு நிறுவன வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்படும்.
இவ்வாறு மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
