பெண்ணுக்கு பாலியல் தொல்லை இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
பெண்ணுக்கு பாலியல் தொல்லை இன்ஸ்பெக்டர் 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 18, 2026 06:19 AM

மங்களூரு: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, மூடபிதரே இன்ஸ்பெக்டர் சந்தேஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மூடபிதரேவை சேர்ந்த பெண்ணொருவரின் கணவரை, மூடபிதரே போலீசார் கைது செய்தனர். இவர் மீது பொய்யான வழக்கு பதிவானதால், கணவரை விடுவிக்கும்படி மனைவி வேண்டுகோள் விடுத்தார்.
அவரிடம் இன்ஸ்பெக்டர் சந்தேஷ், 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பணம் இல்லையென்றால் தன் இச்சைக்கு இணங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தினார். இது குறித்து, ஊடகங்களிடம் விவரித்த அப்பெண், முதல்வருக்கும் புகார் அனுப்பினார்.
இன்ஸ்பெக்டர் சந்தேஷ், மேலும் சில பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள், மாநில மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, மங்களூரு நகர் போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டிக்கு, மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடிதம் எழுதியுள்ளார்.
இதன்படி நடவடிக்கை எடுத்த போலீஸ் கமிஷனர் சுதீர் குமார் ரெட்டி, இன்ஸ்பெக்டர் சந்தேஷை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். போலீஸ் நிலையத்தில், யார் மீதாவது வழக்கு பதிவானால், அந்த நபரின் மனைவி மீது இன்ஸ்பெக்டர் சந்தேஷ் கண் வைப்பார். அவர்களை மிரட்டி ஆசைக்கு பணிய வைப்பார்.
பெண்களை சந்திக்க இரவு நேரத்தில், காம்பவுண்ட் சுவற்றை தாண்டி குதித்து, வீட்டுக்குள் நுழைவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
