/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யானை நடமாட்டம் குறித்த தகவலுக்கு 'வாட்ஸாப் குழு' உருவாக்க அறிவுறுத்தல்
/
யானை நடமாட்டம் குறித்த தகவலுக்கு 'வாட்ஸாப் குழு' உருவாக்க அறிவுறுத்தல்
யானை நடமாட்டம் குறித்த தகவலுக்கு 'வாட்ஸாப் குழு' உருவாக்க அறிவுறுத்தல்
யானை நடமாட்டம் குறித்த தகவலுக்கு 'வாட்ஸாப் குழு' உருவாக்க அறிவுறுத்தல்
ADDED : பிப் 24, 2026 06:38 AM

சிக்கமகளூரு: ''வனப்பகுதியில் யானை நடமாட்டம் குறித்து மக்களுக்கு உடனடியாக தெரிவிக்கும் வகையில் 'வாட்ஸாப் குழு' உருவாக்க வேண்டும்,'' என வனத்துறை அதிகாரிகளுக்கு, வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அறிவுறுத்தி உள்ளார்.
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்., புரா தாலுகா ஹுனசேஹள்ளி கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் கூலி தொழிலாளராக பணிபுரிந்தவர் போரம்மா, 33. இவர், நேற்று முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கும்கி யானை உதவியுடன், வனத்துறையினர் காட்டு யானையை பிடித்து சென்றனர்.
இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் யானை தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால், காபி தோட்டத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள் மாநில அரசின் மீது கோபத்தில் உள்ளனர்.
இதை புரிந்து கொண்ட வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, சிக்கமகளூரு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் வீடியோ கான்பரன்சில் உரையாற்றினார். அப்போது, அவர் கூறியதாவது:
மனித - வனவிலங்கு மோதல் உள்ள இடங்களில் உள்ளூர் தலைவர்கள், மக்கள் அடங்கிய வாட்ஸாப் குழுக்களை உருவாக்கவும். இந்த குழுக்களில் யானை நடமாட்டம் குறித்த தகவல்கள் உடனுக்குடன் பகிர வேண்டும். இதன் மூலம், ஊர் மக்கள் எச்சரிக்கையாக இருப்பர்.
மனித உயிர் விலைமதிப்பற்றது. சிக்கமகளூரு பகுதியில் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். வன ஊழியர்கள் 24 மணி நேரமும் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
வனவிலங்குகளை பிடிக்கும் நடவடிக்கையின் போது ஊரடங்கு உத்தரவு போட வேண்டும். சிக்கமகளூரு வனப்பகுதியில் 35 யானைகள் மூன்று குழுக்களாக சுற்றித்திரிகின்றன. கோடைக் காலத்தில் யானைகள் காடுகளை விட்டு வெளியேறுவது இயல்பானது என்றாலும், மனித - வனவிலங்கு மோதல்கள் ஏற்படாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

