/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரஹலட்சுமி' திட்டத்திற்கு ஆயுள் சான்றிதழ் கட்டாயமாகிறது?
/
'கிரஹலட்சுமி' திட்டத்திற்கு ஆயுள் சான்றிதழ் கட்டாயமாகிறது?
'கிரஹலட்சுமி' திட்டத்திற்கு ஆயுள் சான்றிதழ் கட்டாயமாகிறது?
'கிரஹலட்சுமி' திட்டத்திற்கு ஆயுள் சான்றிதழ் கட்டாயமாகிறது?
ADDED : பிப் 09, 2026 05:04 AM
பெங்களூரு: 'கிரஹலட்சுமி' திட்டத்தின் கீழ் மாதம் 2,000 ரூபாய் பெற, பெண்கள் ஆயுள் சான்றிதழ் சமர்பிப்பதை கட்டாயமாக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலர் ஷாலினிக்கு, முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
கர்நாடக அரசின் ஐந்து வாக்குறுதி திட்டங்களில், கிரஹலட்சுமியும் ஒன்று. இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளன. முறையாக மாதந்தோறும் பணம் வருவது இல்லை என்று, பல இடங்களில் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்றும் குழுவின் துணை தலைவரான, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூளிகவுடா, முதல்வர் சித்தராமையாவுக்கு எழுதிய கடிதம்:
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், 2023ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து, ஒவ்வொரு பெண் பயனாளிக்கும் தலா 2,000 ரூபாய் செலுத்தப்படுகிறது. உணவு துறையால் விநியோகம் செய்யப்படும் அந்த்யோதயா, பி.பி.எல்., மற்றும் ஏ.பி.எல்., ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவியாக குறிப்பிடப்பட்டு இருக்கும் பெண் தான், இந்த திட்டத்தின் பயனாளி ஆவார். கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு கோடியே 23 லட்சத்து 12,543 பெண்களுக்கு 57,300 கோடி ரூபாய் செலுத்தப்பட்டு உள்ளது. சில இடங்களில் குடும்ப தலைவியர் இறந்தாலும், அவர்களின் வங்கிக்கணக்கிற்கு மாதம் 2,000 ரூபாய் செல்கிறது. இது அரசுக்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஓய்வூதிய தொகை பெற, ஒவ்வொரு ஆண்டும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது போல, கிரஹலட்சுமி திட்ட பெண் பயனாளிகளும், ஒவ்வொரு ஆண்டும் ஆயுள் சான்றிதழ் சமர்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு இருந்தது.
இந்த கடிதத்தை பரிசீலனை செய்து தேவையான நடவடிக்கையை உடனே எடுக்கும்படி, தலைமை செயலர் ஷாலினிக்கு, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.

