/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹிந்து பயர் பிராண்ட்' எத்னாலை மீண்டும் பா.ஜ.,வில் சேர்க்க திட்டம்?
/
'ஹிந்து பயர் பிராண்ட்' எத்னாலை மீண்டும் பா.ஜ.,வில் சேர்க்க திட்டம்?
'ஹிந்து பயர் பிராண்ட்' எத்னாலை மீண்டும் பா.ஜ.,வில் சேர்க்க திட்டம்?
'ஹிந்து பயர் பிராண்ட்' எத்னாலை மீண்டும் பா.ஜ.,வில் சேர்க்க திட்டம்?
ADDED : அக் 08, 2025 12:17 AM

பா.ஜ.,வில் இருந்து கொண்டே கட்சிக்கு எதிராக செயல்பட்டதால், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே, ஆறு ஆண்டுகள் நீக்கப்பட்ட, 'ஹிந்து பயர் பிராண்ட்' பசனகவுடா பாட்டீல் எத்னாலை, மீண்டும் பா.ஜ.,வுக்கு அழைத்து வர வேண்டும் என மேலிடத்துக்கு நெருக்கடி வலுக்கிறது.
விஜயபுரா சட்டசபை தொகுதியில் பா.ஜ., சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பசனகவுடா பாட்டீல் எத்னால். 'ஹிந்து பயர் பிராண்ட்' என, பெயர் பெற்றவர். இவருக்கும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கும் ஏழாம் பொருத்தம். எடியூரப்பா மற்றும் அவரது மகன்களை பற்றி, கடுமையாக விமர்சித்தார்.
சட்டசபை விஜயேந்திராவை மாநில தலைவராக நியமித்த பின், எத்னாலின் விமர்சனம் அதிகரித்தது. ஊடகத்தினர் சந்திப்பு நடத்தும் போதெல்லாம், எடியூரப்பாவையும், அவரது மகன்கள் ராகவேந்திரா, விஜயேந்திராவையும் கடுமையாக விமர்சித்தார். 'பா.ஜ.,வில் முதல்வராக வேண்டுமானால், 2,000 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும்' என, சட்டசபையிலேயே குற்றம் சாட்டினார்.
'எங்கள் கட்சியில் சிலர், காங்கிரஸ் அரசை கவிழ்த்து, முதல்வர் பதவியில் அமர 2,000 கோடி ரூபாயை தயார் செய்து வைத்துள்ளனர்' என்றும் புகார் கூறினார். இது, கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியது.
அவர் மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என, மாநில தலைவர் விஜயேந்திரா, மேலிடத்தில் புகார் செய்தார். மேலிடமும் எத்னாலை எச்சரித்தது. ஆனாலும், அவர் தன் போக்கை மாற்றிக் கொள்ளவில்லை. எனவே, அவரை ஆறு ஆண்டுகள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, பா.ஜ., ஒழுங்கு கமிட்டி, நடப்பாண்டு மார்ச் 25ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கிடையில், அவரை மீண்டும் கட்சிக்கு அழைத்து வர, சில தலைவர்கள் முயற்சிக்கின்றனர். எத்னால் போன்ற வலுவான தலைவர் இல்லாததால், கட்சியை பலப்படுத்த முடியவில்லை. கட்சியை முன்னடத்தும் திறன், விஜயேந்திராவுக்கு இல்லை. காங்கிரஸ் அரசுக்கு எதிரான பல அஸ்திரங்கள் கிடைத்திருந்தும், அதை சரியாக பயன்படுத்தி, அரசை நெருக்கடியில் சிக்க வைக்க, அவரால் முடியவில்லை.
ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம், மாவட்ட, தாலுகா பஞ்சாயத்து தேர்தல், சட்டசபை தேர்தல் என அடுத்தடுத்து அணிவகுக்கும். ஹிந்துக்களின் ஓட்டுகளை ஈர்க்க வேண்டும்; இதற்கு எத்னால் வேண்டும். பா.ஜ.,வில் இருந்து நீக்கிய பின், எத்னாலின் செல்வாக்கு சரியும் என்றும், அவரது அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகும் எனவும் பலரும் நினைத்தனர். ஆனால், அவரது செல்வாக்கு அதிகரிக்கிறது.
விநாயகர் ஊர்வலம் மாண்டியா மாவட்டம், மத்துாரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில், வேறு சமுதாயத்தினர் கல் வீச்சு நடத்தியதால், கலவரம் வெடித்தது. இதை கண்டிக்க எத்னால், சம்பவ இடத்துக்கு சென்ற போது, அவருக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, பா.ஜ.,வினரே அதிர்ச்சி அடைந்தனர். மத்துார் மட்டுமின்றி, பெலகாவி, தாவணகெரே, ராய்ச்சூர் உட்பட பல இடங்களில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு எத்னால் சென்ற போது, பெருமளவில் மக்கள் குவிந்தனர்.
'எத்னால் வருகிறார்' என்ற தகவலை கேட்டதும், ஹிந்து தொண்டர்கள் தாமாக முன் வந்து ஊர்வலத்தில் பங்கேற்று, அவருக்கு வாழ்த்து கோஷமிட்டனர். நாளுக்கு நாள் அவரது செல்வாக்கு அதிகரிப்பதால், பா.ஜ., மந்தமாகிறது என, தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர். அவரை மீண்டும் கட்சிக்கு வரவழைக்க, பா.ஜ.,வின் ஒரு கோஷ்டி, மேலிட தலைவர்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது.
எத்னாலை கட்சியில் சேர்க்கும் சூழ்நிலை உருவானால், எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தின ரை விமர்சிக்க கூடாது என, நிபந்தனை விதிக்கவும் மேலிடம் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பிடிவாத குணம் கொண்ட எத்னால், அந்த நிபந் தனையை ஏற்பாரா என்பது சந்தேகம்.
- நமது நிருபர் -