ADDED : ஜூன் 01, 2026 12:21 AM
பெலகாவி: முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி குறித்து அவதுாறு கருத்து பரப்பியதாக, இரண்டு முகநுால் கணக்குகளின் நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
'கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா ராஜினாமா செய்ய, முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தான் காரணம்; சித்தராமையாவை பதவியில் இருந்து நீக்க 37 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்தை சதீஷ் ஜார்கிஹோளி வாங்கினார்; சித்தராமையா முதுகில் குத்தி விட்டார்' என, இரு முகநுால் கணக்கில் பதிவிடப்பட்டு இருந்தது. இந்த பதிவு வைரலானது.
இந்நிலையில் சதீஷ் ஜார்கிஹோளி குறித்து பொய்யாக அவதுாறு பரப்புவதாகவும், குருபா - எஸ்.டி., சமூகம் இடையில் பிரச்னையை துாண்டி விட முயற்சிப்பதாகவும், இரண்டு முகநுால் கணக்கின் நிர்வாகிகள் மீது, சதீஷ் ஆதரவாளர் ராஜசேகர் என்பவர், பெலகாவி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்படி, முகநுால் கணக்கு நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவாகி உள்ளது. விசாரணை நடக்கிறது.
