ADDED : மே 18, 2026 11:27 PM
ஹாவேரி: நகைக்கடையில் கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகாவின் சிக்கவும்ஷி ஹோசூர் கிராமத்தில், அன்னப்பா பஜந்த்ரி என்பவருக்கு சொந்தமான, 'சாரதா ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், தங்க நகைக்கடை உள்ளது.
மே 16ல் அதிகாலை 2:00 மணியளவில், இங்கு வந்த மர்ம கும்பல், பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, 26 கிலோ வெள்ளிப் பொருட்கள், 310 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி கொண்டு தப்பினர்.
மறுநாள் கடைக்கு வந்த அன்னப்பா பஜந்த்ரி, திருட்டு நடந்திருப்பதை பார்த்து உடனடியாக போலீசாருக்கு புகார் செய்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர். தனிப்படை அமைத்து பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகள் உட்பட பல வழிகளில் கிடைத்த தடயங்களை வைத்து, கதக் மாவட்டம், லட்சுமேஸ்வர் தாலுகாவின் பால ஹோசூரை சேர்ந்த சிவராஜ் மோடகேர், 29, ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரை சேர்ந்த அசோக் கொன்சிகொரவர், 29, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து வெள்ளி பொருட்கள், தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சம்பவம் நடந்த 48 மணி நேரத்துக்குள், கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு, ஹாவேரி எஸ்.பி., வெகுமதி அறிவித்துள்ளார்.
