ADDED : மே 14, 2026 12:07 AM

- நமது நிருபர் -
பெங்களூரில் ஐ.டி., - பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்வோர் வேலைப்பளு, மன அழுத்தத்தை குறைக்க, வார இறுதி நாட்களில், 'டிரெக்கிங்' செல்வர். தோளில் ஒரு பெரிய பேக், அதற்குள் தேவையான பொருட்கள், கையில் ஒரு தடியை எடுத்து கொண்டு, மலையேற ஆரம்பித்து விடுவர்.
இதனால், வார இறுதி நாட்களில் பெங்களூரு மற்றும் அதை சுற்றியுள்ள ராம்நகர், துமகூரு, கோலார், சிக்கபல்லாபூர் மாவட்டங்களில் உள்ள மலையேற்ற பகுதிகளுக்கு, கடும் கிராக்கி இருக்கும். இதில் ஒரு மலையை பற்றி பார்ப்போம்.
சிக்கபல்லாபூரில் இருந்து, 20 கி.மீ.,யில் உள்ளது சுடஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில் கல்வாரா பெட்டா என்ற மலை உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து, 3,760 அடி உயரத்தில் அமைந்து உள்ளது.
அடிவாரத்தில் இருந்து செல்லும் போது, சாலை சற்று கரடுமுரடாக இருக்கும். ஆனால் மலை மீது ஏறி செல்ல, செல்ல புதிய அனுபவமாக இருக்கும்.
மலை உச்சியில் பழமையான சிறிய மண்டபம், நந்தி சிலை அமைந்து உள்ளது. சிறிய மண்டபத்தின் மீது ஏறி நின்று பார்த்தால், சுடஹள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை கண்டு ரசிக்கலாம்.
இந்த மலையில் இரவு கூடாரம் அமைத்து தங்கவும் அனுமதி உண்டு. இரவில் தங்குபவர்கள் அதிகாலையில் எழுந்தால், சூரிய உதயத்தை கண்டு ரசிக்கலாம்.
பாறைகள் மீது மேகங்கள் தவழ்ந்து செல்வதை பார்ப்பது, கண்கொள்ளா காட்சியாக இருக்கும். நண்பர்களுடன் ஒரு குழுவாக சென்று, பொழுதுபோக்குவதற்கு ஏற்ற இடமாகவும் உள்ளது.
கர்நாடகா - ஆந்திரா எல்லையில் சிக்கபல்லாபூர் அமைந்து இருப்பதால், ஆந்திராவில் இருந்தும் ஏராளமானோர், டிரெக்கிங் வருவர். பெங்களூரில் இருந்து கார், பைக்கில் சென்றால் மலை அடிவாரத்தில் நிறுத்தி செல்லலாம்.
