கன்னட அமைப்பினரின் போராட்டம் எதிரொலி சரக்கு ரயில் கார்டு பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு
கன்னட அமைப்பினரின் போராட்டம் எதிரொலி சரக்கு ரயில் கார்டு பதவிக்கான தேர்வு ஒத்திவைப்பு
ADDED : மார் 18, 2026 06:15 AM

பெங்களூரு: கன்னடத்தில் தேர்வை நடத்த வேண்டும் என, கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தியதால், சரக்கு ரயில் கார்டு பதவிக்கு நேற்று நடக்க இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.
தென்மேற்கு ரயில்வேயில், குரூப் சி, டி பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, சரக்கு ரயில் கார்டாக பதவி உயர்வு அளிக்க, ரயில்வே துறை சார்பில் நேற்று தேர்வு நடக்க இருந்தது. தென்மேற்கு ரயில்வே தலைமையகமான ஹூப்பள்ளியில் உள்ள ஆள்சேர்ப்பு பிரிவு அலுவலகத்தில், கணினி வழி தேர்வுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால், இந்த தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே இருந்தன. கன்னடத்தில் இல்லை.
இதுபற்றி ஏற்கனவே அறிந்திருந்த கன்னட அமைப்பினர், கன்னடத்திலும் தேர்வை நடத்த வேண்டும் என, ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர். கன்னடத்தில் தேர்வு நடக்காவிட்டால், போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்து இருந்தனர். ஆனாலும், இந்த எச்சரிக்கையை மீறி, தேர்வுக்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து இருந்தது.
இதனால், கோபம் அடைந்த கர்நாடக ரக் ஷன வேதிகே உள்ளிட்ட கன்னட அமைப்புகள், தேர்வு நடக்க இருந்த மையத்தின் முன் அமர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பின.
ரயில்வேயில் முக்கிய பதவிகளுக்கு, வடமாநிலத்தினரை நியமிக்க பார்ப்பதாகவும், இதற்காகவே ஆங்கிலம், ஹிந்தியில் தேர்வு நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல, பெங்களூரில் உள்ள தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு மண்டல அலுவலகம் முன் போராட்டம் நடத்த கன்னட அமைப்பினர் குவிந்தனர்.
அவர்களையும் கைது செய்து போலீசார் வேன்களில் ஏற்றி சென்றனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
கன்னட அமைப்பினர் போராட்டம், ஆக்ரோஷத்தை தொடர்ந்து, நேற்று நடக்க இருந்த தேர்வை ரயில்வே துறை ஒத்திவைத்தது. தேர்வுக்கான புதிய தேதியை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
